Show all

வேந்தர் மூவிஸ் மதன், கங்கையில் சமாதி அடைவதாக காணாமல் போயுள்ளார்

வேந்தர் மூவிஸ் நிறுவனத்தை ஆரம்பித்தவர் மதன்.

எஸ்.ஆர்.எம். நிறுவனத்தைச் சேர்ந்த பாரிவேந்தர் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் பெயரில் நிறுவனத்தை ஆரம்பித்தார். சில படங்களைத் தயாரித்ததோடு விநியோகமும் செய்துள்ளார். இந்நிலையில் வேந்தர் மூவிஸ் மதன்,

தான் காசிக்குச் சென்று கங்கையில் சமாதி அடையப்போவதாகக் கடிதம் எழுதிவைத்து காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

வேந்தர் மூவிஸின் லெட்டர் பேடில் மதன் எழுதியதுபோல ஒரு கடிதம் வெளியாகியுள்ளது. அதில், காசிக்கு சென்று கங்கையில் சமாதி அடையப் போவதாக மதன் கூறியுள்ளார்.

மேலும் எஸ்ஆர்எம் கல்லூரி தொடர்பாகவும் சில தகவல்களை அவர் எழுதியுள்ளார். இது அவர் எழுதிய கடிதம் தானா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில் அவர் கூறியதை ஊர்ஜிதம் செய்வதுபோல காணாமல் போயிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனால் பதற்றமாகியுள்ள மதன்  குடும்பத்தினரும் நண்பர்களும் மதனைத் தேடி வாரணாசி (காசி) சென்றுள்ளார்கள். அங்குக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேடுதல் வேட்டையில் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் நடிகர் ராகவா லாரன்ஸூம் இணைந்துள்ளார்கள்.

 

வாரணாசியில் மதன் தங்கியிருந்த விடுதி பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அங்கும் அவர் காணப்படவில்லை. இதனால் 5 படகுகள் அமைத்து கங்கை நதியிலும் அவரைத் தேடிவருகிறார்கள். மதனின் நிலைமை தெளிவாகத் தெரியப்படாததால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஒரு பேட்டியில் கூறியதாவது: பலருடைய உதவியுடன் வாரணாசியில் தேடிவருகிறோம். ஐஜி அலுவலகத்திலும் புகார் அளித்தோம். எங்கள் தேடுதலில் காவல்துறையினர் சிறந்தமுறையில் ஒத்துழைப்பு தருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.