Show all

பொன். ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளதை அடுத்து திமுக உண்ணாவிரதம் ரத்து

நடுவண் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளதை அடுத்து திமுக நடத்துவதாக அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம் என்று கருதுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பொங்கல் நாள், தமிழர் திருநாள்,  என்பதையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு - ஏறு தழுவல் - மஞ்சுவிரட்டு என்ற பெயரில்   தமிழக கிராமங்களில் எல்லாம் இளைஞர்கள் பங்கேற்கும் வீர விளையாட்டு;

இந்த விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தும் விழாக் குழுவினர் என்னையும், கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலினையும் 18-12-2015 அன்று நேரில் சந்தித்து பேசியதையொட்டி,  அவர்களது  வேண்டுகோளையும், உணர்வுகளையும் மதித்தும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்படும் தடையினால் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு விளைவுகளை எண்ணிப் பார்த்தும்,  தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளத்தைக் காப்பாற்றுவதற்காகவும், நடுவண் மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையிலே உடனடியாகத் தலையிட்டு,   ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அவசியம் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி,  மதுரை மாவட்டத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 28-12-2015 அன்று  ஜல்லிக்கட்டு விழாவினை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வந்த அலங்காநல்லூரில்  உண்ணாவிரதம் மேற்கொள்ளவும்,  அதிலே அனைத்துக் கட்சியினரும் பங்கு பெற வேண்டுமென்றும் 18-12-2015 அன்றே  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  

28-1-2015 அன்று அலங்காநல்லூரில் கழகப் பொருளாளர், மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜல்லிக்கட்டு விளையாட்டை  வலியுறுத்தி, உண்ணாவிரதம் நடைபெறும் என்று  18-12-2015 அன்று செய்தியாளர்களிடம்  கூறப்பட்ட பிறகு,  23ஆம் தேதியன்று  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்தியப்  பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.  

23-12-2015 அன்று நடுவண் அமைச்சர், பொன். இராதாகிருஷ்ணன் தொலைக் காட்சிகளில் ஜல்லிக்கட்டு பற்றி அளித்த பேட்டியைத் தொடர்ந்து நடுவண் இணை அமைச்சருக்கு நான்  எழுதிய அவசரக் கடிதத்தில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு எவ்வித இடையூறுமின்றி நடைபெற பிரதமரைச் சந்தித்து தேவையான முயற்சிகளை உடனே மேற்கொள்ள வேண்டு மென்று வலியுறுத்தியிருந்தேன்.  அந்தக் கடிதத்திற்கு அன்றிரவே பதில் எழுதிய நடுவண் இணை அமைச்சர்,  

ஜல்லிக்கட்டை  நடத்த தாங்கள் எடுத்த முயற்சிகள்  குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.   தமிழர்களின் பண்பாட்டு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை மீண்டும் நடத்த வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து நான் முயன்று வருகிறேன்.

நேற்றையதினம் (22-12-2015) பிரகாஷ் ஜாவ்டேகர் தனது துறையைச் சார்ந்த அதிகாரிகளை அழைத்து, ஜல்லிக்கட்டை நடத்த எந்த வழிமுறைகளைக் கையாளலாம் என்று ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.   23-12-2015 அன்று ஜல்லிக்கட்டு குழுத் தலைவர் ராஜசேகர் அவர்களோடு நடுவண் அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் அவர்களைச் சந்தித்து, ஜல்லிக்கட்டை ஜனவரி 2016இல் தைப்பொங்கல் அன்று நடத்த அனுமதி வேண்டுமென்று வலியுறுத்தினேன்.  கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் வருகின்ற ஜனவரி மாதம், தமிழர் திரு நாளாம்  தைப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதி பெற்று விடுவோம் என்கின்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவை அனைத்திற்கும் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முழு ஆதரவு உள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். என்று அவசரக் கடிதம் எழுதியதையும் இந்த நேரத்தில் நாம் மனதில் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

தமிழகத்தைச் சேர்ந்த நடுவண் அமைச்சர் இவ்வாறு கடிதம் எழுதியுள்ள  நிலையில் 28ஆம் தேதியன்று அலங்காநல்லூரில் நமது கழகப் பொருளாளர், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம் என்று கருதுகிறேன்.   ஜல்லிக் கட்டு விழாவினை நடத்த வேண்டு மென்று கோரி என்னைச் சந்தித்த  குழுவினரும் நடுவண் அரசின் இணை அமைச்சர் தெரிவித்துள்ள நம்பிக்கையை ஏற்று,  இந்த முடிவினை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.