Show all

புயலின் பாதிப்பு நேரில் காண்கையில் மிகக் கொடூரமாக உள்ளது! வெளியில் முழுமையாக தெரியவில்லை: இயக்குநர்கள்

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயலின் பாதிப்புகள் குறித்து கேள்விப்பட்டதைவிட நேரில் சென்று காணும் போது பெரிய அளவில் இருப்பதாகவும், புயலின் பாதிப்பு வெளி உலகுக்கு தெரிய வில்லை எனவும் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றி மாறன், சுப்பிரமணியம் சிவா ஆகியோர் தெரிவித்தனர்.

தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: புயல் பாதிப்புகளை பார்வையிட நாங்கள் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு நேற்று வந்தோம். சென்னையில் நாங்கள் கேள்விப்பட்டது வேறு, களத்தில் வந்து பார்க்கும்போது அது வேறுவிதமாக உள்ளது. ஒரு நாளில் சென்றுவிடலாம் என எண்ணி வந்தோம், ஆனால், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் படும் துயரங்களை பார்த்து இன்னும் இரண்டொரு நாட்கள் தங்கி உதவிகளை செய்யலாம் என உள்ளோம்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பாதிப்பு அருகில் உள்ள இதர மாவட்டங்களுக்கோ, மாநிலங்களுக்கோ தெரியாமல் உள்ளது. இந்த பாதிப்புகளை வெளி உலகம் தெரிந்து கொள்ளவும், இதன் பாதிப்பு உண்மையிலேயே அதிகமாக இருப்பதாலும் நடுவண் அரசு உடனடியாக தேசிய பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.

பல்வேறு மனக்கசப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்து விட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் ஓரணியில் திரண்டு ஒரே குரலாக, புயல் பாதிப்புகளை பார்வையிட வரும் மத்திய குழுவினரிடம் தேசிய பேரிடரால் பாதிக்கப் பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்த வேண்டும். தென்னை உழவர்களுக்கு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை அரசு உயர்த்த வேண்டும். பாதிக்கப் பட்ட தென்னை உழவர்களுக்கு வரும் 10 ஆண்டுகளுக்கு ஆண்டு தோறும் மானியம் வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் உணவும், மின்சாரமும்தான் கேட்கின்றனர். இவற்றை உடனடியாக வழங்க வேண்டியது அரசின் கடமை. உணவு வழங்குவதில் தன்னார்வ அமைப்புகளும் உதவ வேண்டும். மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஊழியர்களின் பணி பாராட்டத்தக்க வகையில் உள்ளது.

மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப் பட்டுள்ளனர். இணையதள சேவை கிடைக்காத நிலையில் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்.

இப்பகுதியில் கல்விக்கடன், வேளாண் கடன், கல்விக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால், அவர்கள் பாதிப்புகளை கணக்கெடுத்து அரசுக்கு வழங்கியிருப்பார்கள். உடனடியாக நிவாரணப் பணிகளையும் தொடங்கியிருப்பார்கள். தற்போது இந்தப் பணிகள் தொய்வடைந்துள்ளன.

இதனால்தான் மக்களின் கோபம் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீது திரும்புகிறது. மாநில அரசு, மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்த வேண்டும் என்றனர்.

புயல் பாதிப்புகளை வெளி உலகம் தெரிந்து கொள்ளவும், இதன் பாதிப்பு உண்மையிலேயே அதிகமாக இருப்பதாலும் நடுவண் அரசு உடனடியாக தேசிய பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,982.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.