Show all

கலைஞரை நினைவூட்டுகிறது என்று பெரிசுகள் கண்ணீர்! ஸ்டாலின் அசத்தல் பேச்சு

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கலைஞர் அடுக்குமொழி கனித்தமிழுக்காக, திடலில் கலைஞர் வரும் வரை மக்கள் காத்துக் கிடப்பார்கள். தூக்கம் வந்தாலும் துங்கி வழிந்து கொண்டே காத்திருப்பார்கள். கலைஞர் மேடையேறியதும் பேசத் தொடங்குவார். மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, மக்களோ நித்திரை என்று தனது அடுக்கு மொழி தமிழில் முழங்குவார் பாருங்கள் கைத்தட்டல் வானைப் பிளக்கும்.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று மக்கள் மகிழ்ச்சி கொள்ளும் வகையில், அடுக்;கு மொழியில் பேசி அசத்தியிருக்கிறார் ஸடாலின் அவர்கள்.
வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் என அத்தனையும் இந்தியாவில் உள்ளது. மோடி மட்டும் வெளிநாட்டில் இருக்கிறார் என்று பேசி அசத்தியிருக்கிறார் ஸ்டாலின்.

பெரம்பலூரில் திமுக சார்பில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
பாசிச விலங்குகளையும், ஊழல் கிருமிகளையும் வேட்டையாடுவதற்கு அறைகூவல் விடுக்க ஒருகளமாக பெரம்பலூர் அரியலூர் மாவட்டத்தை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். திருச்சி செல்லும் போதெல்லாம் இந்த பெரம்பலூரைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். திருச்சி திமுகவின் கோட்டையாக எப்படி உள்ளதோ அதன் கோட்டை வாசல் பெரம்பலூர் மாவட்டம் ஆகும்.


 
இன்றைக்கு கூடியிருக்கும் இந்தக் கூட்டம் வழக்கமான கூட்டம் அல்ல. இன்னும் வெளிப்படையாகக் கூறுவதென்றால் அகில இந்தியாவும் கவனிக்கும் கூட்டமாக இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு அடுத்த தலைமைஅமைச்சரைத்;  தேர்வு செய்யும் ஒரு தேர்தலை நாமெல்லாம் எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறோம்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்த்து வரப்போகிறதா? அது எந்த நிலையில் வந்தாலும், எப்படிப்பட்ட சூழ்நிலையில் வந்தாலும் எந்த நேரத்தில் வந்தாலும் அதை சந்திக்கத் தயாராக உள்ளதை அறிவிக்கும் கூட்டம்தான் இந்தக் கூட்டம் என்பதை நாம் மறக்கக்கூடாது.

மத்தியில் பாசிச பாஜக ஆட்சி, மாநிலத்தில் ஊழல் மிக்க அதிமுக ஆட்சி என இரண்டையும் ஒருசேர விரட்டும் வல்லமை நமது திமுகவிற்கு உண்டு என்பதை அறிவிக்கும் கூட்டம் இது. இந்த நாளை நாம் தேர்ந்தெடுத்ததிலும் ஒரு காரணம் உண்டு. இந்த நாளை நாம் மறக்கக்கூடாது. மோடியால் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நாள் இன்று.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருக்கிற 120 கோடி மக்களையும் முட்டாளாக்கினாரே மோடி. 1000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்தாரே அந்த நாள். கறுப்புப் பணம் ஒழியும், ஊழல் அடியோடு ஒழிக்கப்படும், கள்ள ரூபாய் தாள்கள் குறையும், தீவிரவாதம் அகற்றப்படும் என்று மோடி மஸ்தான் வித்தைபோல் அறிவித்தார்.

இரண்டு ஆண்டுகள் அகன்றுவிட்டன, நான் தலைமை அமைச்சர் மோடியைப் பார்த்துக் கேட்கிறேன், 2 ஆண்டுகள் இன்றோடு முடிந்துள்ளன. திமுக சார்பில் கேட்கிறேன், கறுப்புப் பணம் காணாமல் போய் விட்டதா? ஊழல் ஒழிந்து போய் விட்டதா? கள்ள ரூபாய்தாள்கள் முற்றாகக் களையப் பட்டு விட்டதா? தீவிரவாதத்திற்கு முழுமையாகத் தீர்வு காணப்பட்டு விட்டதா? என்ன சாதித்தார் மோடி ஒன்றுமே இல்லையே.

நான் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டுவந்து ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அவரது வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என்று அறிவித்தாரா? இல்லையா?

இதுவரை யாருடைய கணக்கிலாவது 15 லட்சம் அல்ல, 15 ஆயிரம் அல்ல 15 ரூபாயாவது போட்டிருப்பார் என்று தைரியமாகக் கூற முடியுமா? 15 ரூபாய் என் கணக்கில் மோடி போட்டிருக்கிறார் என்று சொன்னால் நான் மன்னிப்பு கேட்கிறேன். சரி வெளிநாட்டிலிருந்து கறுப்புப் பணத்தையாவது கொண்டுவந்தீர்களா? அதுவும் கிடையாது.

கிராமத்தில் ஒரு கதை உண்டு. 365 நாட்கள் கழித்து ஒரு மலையைத் தூக்கப்போகிறேன் என்று ஒருவன் சொல்கிறான். அவன் சொன்னதைக் கேட்டு நம்பி ஏமாந்த கிராம மக்கள் அவனுக்கு ஆண்டு முழுவதும் இலவசமாக உணவு அளிக்கின்றனர்.

365 நாட்கள் முடிந்தவுடன் கிராம மக்கள் மலையைத் தூக்கு என்று கூறியபோது அவன் சொன்னான் எல்லோரும் சேர்ந்து மலையைத் தூக்கி என் தோளில் வையுங்கள் தூக்குகிறேன் என்றான்.

அதுபோல இருக்கிறது மோடியின் கதை. வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அதைப் பற்றி கவலைப்படாதவர்களாக உள்ளனர். என்ன ஆயிற்று என்று நடுவண் அமைச்சர் நிதின் கட்கரி கூறுகிறார். நாங்கள் தேர்தலில் வெற்றிபெற உறுதிமொழியைத் தந்தோம். ஆனால் வெற்றி பெறுவோம் என்று நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் அவ்வாறு வாக்கு கொடுத்திருக்க மாட்டோம் என்று வெளிப்படையாகக் கூறினார்.

வெளிப்படையாக வெட்கத்தை விட்டு ஒரு அமைச்சர் பேட்டி தருகிறார். பாஜகவின் தலைவர் அமித்ஷா என்ன சொன்னார்?  இந்தியாவில் பசி இருக்காது, பட்டினி இருக்காது, கறுப்புப் பணம் இருக்காது என்று சொன்னார். வேலையில்லாத் திண்டாட்டம் இருக்காது என்று சொன்னார், ஊழல் இருக்காது என்று சொன்னார். இவை அத்தனையும் இங்கு இந்தியாவில் இருக்கிறது. ஆனால் தலைமை அமைச்சர் மோடிதான் இந்தியாவிலேயே இருப்பதில்லை. அவர் வெளிநாட்டிலேயே இருக்கிறார்.

வெளிநாடுவாழ் இந்தியர் பற்றி கேள்விப்பட்டுள்ளோம், ஆனால் வெளிநாடுவாழ் தலைமை அமைச்சரை தற்போதுதான் நேரில்ப பார்க்கிறோம். மோடி தலைமைஅமைச்சராகி நான்கரை ஆண்டுகளில் 84 நாடுகளுக்குச் சென்றுவிட்டு வந்துள்ளார். அதற்கு ஆன செலவு 1484 கோடி ரூபாய். இது யார் வீட்டுப் பணம், மக்களுடைய வரிப்பணம். உலக அளவில் அதிக வெளிநாடுகளுக்குச் சென்ற தலைமை அமைச்சர் யார் என்று பார்த்தால் மோடிதான் முதலிடம். அதுதான் அவரது சாதனை.

வளர்ச்சி வளர்ச்சி என்று பேசிய மோடியைப் பார்த்துக் கேட்கிறேன். பெட்ரோல் விலையும் டீசல் விலையும் ஏறியதுதான் வளர்ச்சியா? சரக்கு-சேவை வரியைக் காங்கிரஸ் ஆட்சியில் எதிர்த்தீர்களே, ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் இரவோடு இரவாக அமல்படுத்தினீர்களே. காங்கிரஸ் ஆட்சியில் ஆதார்  தேவையில்லை என்று எதிர்த்தீர்களே, நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆதாரைக் கட்டாயமாக்கினீர்களே?

விஜய் மல்லையாவை அருண் ஜேட்லி மூலம் தப்பவைத்ததுதான் மோடியின் மிகப்பெரிய சாதனை. நிரவ் மோடியை சுஷ்மா ஸ்வராஜ் மூலம் தப்பிக்க வைத்ததுதான் மோடியின் மிகப்பெரிய சாதனை. நிரவ் மோடியை இன்றுவரை காப்பாற்றுவதுதான் மிகப்பெரிய சாதனை.

அஜுஸ் பல்கலைக்கழகம் கர்நாடகாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம். அதன் ஆய்வு முடிவில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் இந்தியாவில்தான் அதிகம் என்று ஆதாரத்தோடு வெளியிட்டுள்ளது. மோடி தலைமையில் உள்ள பாஜகவின் ஆட்சியை அகற்றிட நாமெல்லாம் தயாராகிவிட்டோம் என்பதை எடுத்துக்காட்டிடத்தான் இந்தக் கூட்டம்.

அதன் முன்னோட்டமாகத்தான் அண்மையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துள்ளார். இன்று கர்நாடக மாநில முதல்வரைச் சந்தித்துள்ளார். நாளை என்னையும் சந்திக்கிறார். அதேபோல் பல்வேறு கட்சிகளின் தலைவர்களெல்லாம் இன்று ஒன்றிணைகிறார்கள் என்றால் இந்தச் சந்திப்புக்கெல்லாம் மோடியின் மீதுள்ள தனிப்பட்ட பகை காரணமல்ல.

மோடியால் இந்திய மக்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. அதனால்தான் அகில இந்திய தலைவர்கள் ஒன்று சேர்ந்து மோடியின் ஆட்சியை அகற்றத் தயாராகி வருகிறோம். திமுகவைப் பொறுத்தவரையில் மாநில உரிமையை என்றைக்கும் விட்டுக்கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. அதற்காகத்தான் ஒன்று சேர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.

ஆகவேதான் மாநிலக் கட்சிகள் அத்தனையும் ஒன்று சேரும் நிலை உருவாகிக்கொண்டு வருகிறது. காரணம் மாநில உரிமைகளை மதிக்காதவர் மோடி, யாருடைய ஆலோசனையையும் கேட்காதவர் மோடி, நாடாளுமன்றமே செல்லாதவர் மோடி, நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்காதவர் மோடி இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,965.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.