Show all

தமிழகத் தேர்தல் ஆணையம் தயாராவது நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமா! தமிழக வாக்காளர் பட்டியல் வெளியீடு

18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு அகவை நிரம்பியவர்களை வாக்காளர் தகுதி அடைந்தவர்களாக ஏற்றும், இரட்டைப் பெயர் பதிவு, போலி பெயர் பதிவு, இறந்தவர் பெயர்கள் ஆகியவற்றை நீக்கியும், இன்று புதிய அண்மை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

தலைமைச் செயலகத்திலிருந்து இந்தப் பட்டியலை வெளியிட்டார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 5.91 கோடி வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2,92,56,960 கோடி ஆண் வாக்காளர்களும், 2,98,60,765 கோடி பெண் வாக்காளர்களும், 5,472 மூன்றாம் பாலின வாக்காளர்களும் தமிழகத்தில் உள்ளனர். தமிழகத்தில், மொத்தம் 5,91,23,197 வாக்காளர்கள் இருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சத்து 38 ஆயிரத்து 656 வாக்காளர்கள் அதிகம்.

திருப்பரங்குன்றத்தில் இளம் வாக்காளர்கள் அதிகம். இங்கு 7,697 இளைய வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 4,189, பெண்கள் 3,507).

தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர் ஆகும். இங்கு மொத்தம் 6,18,695 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,11,102, பெண்கள் 3,07,518, மூன்றாம் பாலினத்தவர் 75).

குறைந்த வாக்காளர் கொண்ட சட்டமன்ற தொகுதி துறைமுகம் ஆகும். இங்கு மொத்த வாக்காளர்கள் 1,66,518. (ஆண்கள் 83,039, பெண்கள் 79,427, மூன்றாம் பாலினத்தவர் 49).

முதல் முறையாக ஓட்டு போடும் 18 அகவை நிரம்பியவர்கள் 4.5 லட்சம் பேர் உள்ளனர்.

வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 97 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும்.

வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. 17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120 (1.1.2019) அன்று 18 அகவை நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட தொடர்பு மையங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இங்கு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம்.

தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணுடன் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது.

பாராளுமன்ற தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளோம். தமிழ்நாட்டில் இதுவரை ஒரே கட்டமாகத்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வந்துள்ளன. அதேபோல் தான் இந்த ஆண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே நடுவண் தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பாக எங்களை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் பட்டியல்கள் தயார் நிலையில் உள்ளன.

பாராளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை விரைவில் கூட்டி ஆலோசனை நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. ஓசூர் தொகுதி காலி இடம் பற்றி சட்டசபை செயலாளரிடம் இருந்து எங்களுக்கு தகவல் வரவில்லை. இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,049.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.