கைதியை விடுவிக்கக்கோரி காவல் நிலையத்துக்குள் புகுந்து போலீசைத் தாக்கினர். இதுசம்பந்தமாக 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலூர் அடுத்த திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அய்யனார். இவரை ஒரு வழக்கு சம்பந்தமாக மணலூர்பேட்டை போலீசார் கைது செய்து காவல்நிலையம் கொண்டு வந்தனர். அவரை விடுவிக்க கோரி அதே பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்துக்கு வந்தனர். திடீரென அவர்கள் காவல்நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் தரணிவேலை ஆபாசமாக திட்டி தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இதுகுறித்து தரணிவேல் கொடுத்த புகாரின்படி, திருவரங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமிகுமார், இவரது சகோதரர்கள் குப்புசாமி, ராமச்சந்திரன் மற்றும் வினோத், சிவகுமார் மனைவி மஞ்சு, அய்யனார் மனைவி குப்பு, தேவேந்திரன் மனைவி கைலி, பன்னீர்செல்வம், ஞானவேல், ஆறுமுகம், சங்கர், அசோக், ராஜேஸ்வரி, கந்தசாமி, நாராயணன், அரசு உள்பட அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் குப்பு, கைலி, பன்னீர்செல்வம் (32), அசோக் (34), கந்தசாமி (57) ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.