Show all

விரைவில், சென்னை மாநகராட்சியின் வாடகை மிதிவண்டி! மணிக்கு ரூ5; ஒரு மையத்தில் எடுத்து இன்னொரு மையத்திலும் ஒப்படைக்கலாம்

03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாடகைக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தைக் கொண்டுவர, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஹைதராபாத்தில் செயல்படும் ஸ்மார்ட் பைக் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த வாடகை மதிவண்டி திட்டத்தைச் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. 

பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் வாகன நெரிசலும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதிவண்டி பயணங்களை பல்வேறு வெளிநாடுகள் ஊக்குவித்து வருகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயச் சூழலிலிருந்து மீளும் நடவடிக்கையின் அம்சமாக, குறைந்துவிட்ட மதிவண்டி பயன்பாட்டை அதிகரிக்கவும், பொதுமக்களிடையே மதிவண்டி பயணத்தை ஊக்குவிக்கவும், வாடகைக்கு மதிவண்டி வழங்கும் திட்டத்தைக் கொண்டுவர, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஹைதராபாத்தில் செயல்படும் ஸ்மார்ட் பைக் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த வாடகை மதிவண்டி திட்டத்தைச் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 250 மதிவண்டிகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் இந்த எண்ணிக்கையை 5,000 வரை அதிகரிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவெடுத்து இருக்கிறார்கள். ஹ

ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் வாடகை எனச் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த வாடகை மதிவண்டி திட்டமானது, இப்போதைக்கு சென்னை எழும்பூர், பெசன்ட்நகர், அடையாறு, மெரினா, மயிலாப்பூர், சென்ட்ரல், கிண்டி ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தப்படும். 

நாளடைவில் சென்னைப் பெருநகரம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மதிவண்டி நிறுத்தங்களும் அமைக்கப்பட உள்ளன. ஒருவர் மட்டுமே ஓட்டிச் செல்லக்கூடிய வகையில் இது கட்டமைக்கப்பட்டிருந்தாலும் மதிவண்டியின் முன்னும் பின்னும் தானியங்கி எல்.இ.டி விளக்குகள், ஓட்டும் வேகத்திற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள மூன்று கியர்கள், அத்துடன் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, வாடகைக்கு எடுப்பவர் மதிவண்டியை எங்கு ஓட்டிச்சென்றாலும் அவரைக் கண்காணிக்கக்கூடிய வகையில் இருக்கும். 

இன்றைய காலத்துக்கு ஏற்ப, நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மதிவண்டியின் எடையும் குறைவு என்பதால் எல்லா அகவையினரும் இதைப் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இத்திட்டத்தில் இன்னொரு சிறப்பு அம்சம், மதிவண்டியை வாடகைக்கு எடுத்த இடத்தில்தான் விடவேண்டுமென்கிற கட்டுப்பாடு கிடையாது. அரசு அறிவித்து, நியமித்துள்ள எந்த மதிவண்டி நிறுத்தத்தில் வேண்டுமென்றாலும் வாடகைக்கு எடுப்போர் மதிவண்டியை நிறுத்தலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்த ஸ்மார்ட் பைக் என்ற செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். வாடகை மதிவண்டி திட்டத்துக்கான ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு அறை சென்னைப் பெருநகர மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட இருக்கிறது. இது வெற்றிகரமாகச் செயல்படும் பட்சத்தில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்றத் திட்டத்தைக் கொண்டுவர இருக்கிறார்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,035.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.