தீபாவளியையொட்டி ஈரோடு வார சந்தையில் மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ரூ.5 கோடிக்கு ஜவுளி வணிகம் நடந்தது. ஈரோடு கனிமார்க்கெட் வளாகத்தில் 730க்கும் மேற்பட்ட வாரசந்தை கடைகளும், 330 தினசரி கடை என மொத்தம் 1000க்கும் மேற்பட்ட ஜவுளி கடை செயல்பட்டு வருகின்றன. கனி மார்க்கெட்டில் வாரம்தோறும் ஜவுளி சந்தை நடைபெறும். இந்நிலையில், தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இந்த வாரம் நடைபெற்ற ஜவுளி சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக வாரசந்தையில் ரூ.3 கோடிக்கு ஜவுளி சந்தை நடைபெறும். ஆனால் இந்த வாரம் ரூ.5 கோடி அளவில் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். இது குறித்து ஜவுளி வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், தீபாவளி விற்பனை கடந்த வாரத்தில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகையையொட்டி கடந்த இரண்டு வாரங்களாக ஓரளவு விற்பனை நடந்தது. இந்நிலையில், தற்போது தீபாவளி விற்பனை தொடங்கியுள்ளது. ஜவுளி விலை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லை. நூல் விலை உயர்வு, கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வேலைப்பாடு கொண்ட ஒரு சில ஜவுளி ரகங்களின் விலை அதிகரித்துள்ளது. மொத்த வியாபாரிகள் மற்றும் தலைச்சுமை வியாபாரிகள் அதிக அளவில் ஜவுளிகளை வாங்கி சென்றுள்ளனர். சுமார் ரூ.5 கோடிக்கு ஜவுளி விற்பனை நடந்திருக்கும். விஜயதசமி முடிந்த பிறகு அடுத்த வாரம் கூடுதலாக விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.