22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனது இசையால் உலகை வசப்படுத்தி எல்லோரையும் மகிழ வைத்து வரும்; ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். உள்ளூர் மேடையாக இருக்கட்டும், ஆஸ்கர் மேடையாக இருக்கட்டும், எவ்வளவு பெரிய பாராட்டு விழா நடந்தாலும் அமைதியாக புன்சிரிப்புடன் தன்னடக்கத்தோடு எல்லாவற்றையும் எதிர்கொள்வார் ஏ.ஆர்.ரகுமான். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக இந்த உலகுக்கு அறிமுகமானார். அதில் புது வெள்ளை மழையாக அவரது ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை நனைத்தன. அதன்பிறகு கருத்தம்மா, கிழக்கு சீமையிலே, பம்பாய், இந்தியன் என அவர் இசையமைத்த பல படங்கள் இந்தியாவை தாண்டி உலக அளவில் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தன. வடக்கத்திய திரையுலகில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்த ரஹ்மான், அங்கும் பெரும் புகழ் பெற்றார். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளின் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாப்டா விருது, தேசியத் திரைப்பட விருதுபோன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். மேற்கத்திய திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு கோல்டன் குளோப் விருதும், பாப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவர் தமிழகம் தாண்டி தெலுங்குத் திரையுலகு, வடக்கத்திய திரையுலகு, மேற்கத்திய திரையுலகு என எல்லா திரை துறைகளிலும் புயலாக சுழன்று அடித்தார். இதனால் ஆஸ்கர் விருது வென்றார். அப்போது அந்த விருது வாங்க மேடையில் ஜாக்கிசானுடன் கைகோர்த்து நின்றிருந்த ஏ.ஆர்.ரகுமான். நாவில் அன்று தவழ்ந்தது 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்ற தமிழ் சொற்கள்தாம்;. உலகமே வியந்து பார்த்தது. தமிழர்களை நெகிழ வைத்த அந்த தருணம். ஏ.ஆர்.ரகுமான் பேசியதும் தமிழில் தான். இசை புயலாக இன்றும் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,024.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.