வழக்கமாக, காங்கிரஸில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன்
பிரச்னைகள் அதிகம் எழும். ஆனால், இப்போது தொகுதிகள் அறிவிப்பிலேயே பிரச்னைகள் தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள
41 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஈவிகேஎஸ்
இளங்கோவன் இப்பட்டியலை வெளியிட்டார். இதில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்
ஜோதிமணி போட்டியிட விருப்பம் தெரிவித்த அரவக்குறிச்சி தொகுதி இடம் பெறவில்லை. அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும்
என்றும் தனக்கே வாய்ப்பு அளிக்கப்படும் என்ற நம்பிக்கையில் இளைஞர் காங்கிரஸின் முன்னாள்
பொதுச்செயலாளர் ஜோதிமணி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவருக்காக அரவக்குறிச்சி தொகுதியைப்
பெற்றுத் தருமாறு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டு
வந்தது. ஆனால், அந்தத் தொகுதி ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் ஜோதிமணி கூறியது:
அரவக்குறிச்சியில் சுயேட்சையாகவே போட்டியிடுவேன். கரூர் தொகுதியில் போட்டியிட மாட்டேன்
என்றார். இவர் 2011ஆம் ஆண்டு தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், தென்மாவட்டங்களில் காங்கிரஸுக்கு அதிக அளவில் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினரும் அதிருப்தியில் உள்ளனர். இதுதவிர,
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது மகன் திருமகனை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று ஆலந்தூர்
அல்லது தாம்பரம் தொகுதியைக் கேட்டு வந்துள்ளார். ஆனால், அந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.