பாஜக நடுவண்ஒன்றிய அரசை மகிழ்வூட்டும் வகைக்காக, அண்மையில் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் கல்வி மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக ஹிந்தி கற்பிக்கும் வகுப்புகளை தொங்கிவைத்தார்; முறியடிக்கப்பட்டது. தற்போது பெரிய கோயிலில் சமஸ்கிருத குடமுழுக்கை முன்னெடுக்க முனைந்துள்ளார். இதையும் முறியடிப்போம் என தமிழ்மெய்யியல் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் களம் இறங்கியுள்ளனர். 06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ்வழியில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. தமிழ்மெய்யியல் ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் ஒன்றுகூடி, வரும் புதன் கிழமை தஞ்சாவூரில் இதன்பொருட்டு ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். மேலும் தமிழ்மெய்யியல் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்வழியில்தான் நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனுக்கள் அனுப்பியுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான், அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் உள்ளிட்டவர்களும் இதை வலியுறுத்தியுள்ளார்கள். இந்த நிலையில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு இந்த முறை தமிழிலும் நடக்கும், சம்ஸ்கிருதத்திலும் நடக்கும், என்கிறார். ஆனால் காலங்காலமாக தமிழ்நாட்டில் சிவநெறி கோயில்களில் குடமுழுக்கு நிகழ்வு சம்ஸ்கிருதத்தில் நடத்தப்பட்டதில்லை என்று தமிழக வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நடுவண்ஒன்றிய அரசில் ஆட்சியில் இருக்கும் பாஜகவிற்கு மகிழ்ச்சியை தூண்டும் வகைக்கானதா? தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சரின் சமஸ்கிருத மோகம் என்று இணையத்தில் பரவலாக ஐயம் கிளப்பப்பட்டு வருகிறது. அண்மையில்தான் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சரின் ஹிந்தி மோகச் செயல்பாடான- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி கற்றுக் கொடுப்பது, கடும் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தப்பட்டது. சென்னையிலிருந்து செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் கல்வி மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக ஹிந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிக்கும் வகுப்புகளை தமிழ் (ஹிந்திஅல்ல) வளர்ச்சித் துறை அமைச்சர் மபா பாண்டியராஜன் தொங்கிவைத்தார். இதற்கென ஆறு லட்ச ரூபாயை தமிழக அரசு அண்மையில் ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஆனால், தமிழைப் பரப்புவதற்காகவும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காகவும் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி மொழி கற்பிக்கப்படுவது சரியல்ல என திமுகவும், தமிழறிஞர் பெருமக்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இதற்கு மேலும், சமூக வலைதளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டது. மேலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்பாக ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தியை விருப்பப்பாடமாக கற்பிக்கும் முயற்சிகள் கைவிடப்படுவதாகத் தமிழ் (ஹிந்திஅல்ல) வளர்ச்சித் துறை அமைச்சர் மபா பாண்டியராஜன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.