திருநங்கைகளுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நடிகையும்
காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு மீது நடவடிக்கை கோரி மதுரை நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா, மதுரை நீதித்துறை
நடுவர் நீதிமன்றத்தில் (எண்.4) தாக்கல் செய்த மனு: ஏப்.2 ஆம் தேதி குஷ்பு அளித்தப் பேட்டியில், திருநங்கைகள் தேர்தலில் போட்டியிட அனுபவம் இல்லாதவர்கள், அவர்கள்
உடனடியாக பாராளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக ஆசைப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் திருநங்கைகளை இழிவுப்படுத்தி உள்ளார். தேர்தலில்
போட்டியிடும் திருநங்கைகள் பொதுமக்களிடம் வாக்கு பெற்றுவிடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு
அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். குஷ்பு தெரிவித்துள்ள கருத்து சட்டவிரோதமானதாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்துக் கடவுள்களை இழிவுப்படுத்தியது
மற்றும் பெண்களின் கற்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தற்காக குஷ்பு மீது
பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் எதிரான கருத்தை
தெரிவித்து வரும் குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அளிக்கப்பட்ட புகாரை காவல்துறையினர்
ஏற்கவில்லை. எனவே குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று
குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.