Show all

கெத்து காட்டும் பொன்.மாணிக்கவேல்! அறங்கூற்றுமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, தமிழக அரசு ஆணைக்கு எதிர்ப்பு

பொன். மாணிக்கவேல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு முன்னம் நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. வெளியேற்ற முயற்சியில் எடப்பாடி- பன்னீர் அரசு; கெத்து காட்டும் பொன்.மாணிக்கவேல்!

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பொன். மாணிக்கவேல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு முன்னம் நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

கடந்த சில நாட்களாகவே பொன். மாணிக்கவேலின் பதவிக்காலத்தை தமிழக அரசு நீட்டிக்கப்போவதில்லை என்ற தகவல்கள் வெளியான நிலையில் இன்று, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், உடனடியாக விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும், என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

இந்த நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல், தான் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாது என தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு திங்கட்கிழமை உச்சஅறங்கூற்றுமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. உயர்அறங்கூற்றுமன்றம் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்தது. அதேபோன்று சிறப்பு விசாரணைக் குழுவும் உயர் அறங்கூற்றுமன்றத்தின் உத்தரவின் பெயரில்தான் உருவாக்கப்பட்டது. இதை உச்ச அறங்கூற்றுமன்றமும் உறுதி செய்துள்ளது.

அதனால், உச்ச அறங்கூற்றுமன்றம் அல்லது உயரஅறங்கூற்றுமன்றத்தின் உத்தரவு அல்லது வழிகாட்டுதல் இல்லாமல் விசாரணை ஆவணங்களை சமர்ப்பிக்க சட்டப்படி இயலாது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பான வழக்கு உச்ச அறங்கூற்றுமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், எடப்பாடி, பன்னீர் அரசு, ஆவணங்களைச் சமர்ப்பிக்க கோரி, சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேலுக்கு உத்தரவிடுவதும், அவர் மறுத்துள்ளதும், தமிழக அறிவார்ந்த பெருமக்களிடையே- சிலைக்கடத்தலின் உள்ளிருக்கும் கமுக்கந்தான் என்ன என்கிற கேள்வியையும், ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,352.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.