அ.தி.மு.க., உறுப்பினர் செம்மலை பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து
தி.மு.க., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான
விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது அ.தி.மு.க.,வின் செம்மலை பேசியதாவது:
சமஸ்கிருதத்தை எதிர்க்கும் கருணாநிதி தனது பேரன்களுக்கு சமஸ்கிருதத்தில்
பெயர் வைத்தது ஏன்? முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி. கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட கருணாநிதி தான் காரணம். முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது கருணாநிதி எதுவுமே செய்யவில்லை. இலங்கை படுகொலையின் போது கருணாநிதி அமைதி காத்தார். அதிமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதற்கு கிடைத்த பரிசு
தான் சட்டமன்றத் தேர்தல் வெற்றி. நோக்கியோ, பாக்ஸ்கான் தொழிற்சாலைகள் மூடப்பட்டதற்கு அதிமுக காரணம்
அல்ல என்று பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., உறுப்பினர்கள் அமளியில்
ஈடுபட்டனர். இதன் பிறகு தி.மு.க., சட்டமன்றத் துணைத்தலைவர் துரைமுருகன் பேசியதாவது:
ஹேமாவதி அணை கட்டினாலும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தர வேண்டும்
என கருணாநிதி வலியுறுத்தினார் எனக்கூறினார். தொடர்ந்து ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது: தி.மு.க.,வும் மக்கள்நலக்கூட்டணியும் அ.தி.மு.க.,வை எதிர்த்து
பொய்க் கருத்துப்பரப்புதல் செய்தன. அ.தி.மு.க.,வின் சாதனைகளை மறைக்க பொய்க் கருத்துப்பரப்புதல்
செய்தன. பொய்க் கருத்துப்பரப்புதலை முறியடித்து அதிமுக வெற்றி பெற்றது எனக்கூறினார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், பல பிரச்சனைகள் காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டாலும், அதனைத்
திறக்க அதிமுக நடவடிக்கை எடுக்கவில்லை. நோக்கியா பாக்ஸ்கான் தொழிற்சாலைகளைத் திறக்க
அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தத் தொழிற்சாலைகள் மூடக்கூடிய சூழ்நிலையை அரசு அனுமதித்திருக்கக்கூடாது
என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.