Show all

பிளஸ் 2 மாணவி மற்றும் அவரது தோழியை அடித்துக் கொன்ற நபர்கள் சடலங்களை தண்டவாளத்தில் வீசினர்

பிளஸ் 2 மாணவி மற்றும் அவரது தோழியை அடித்துக் கொன்ற நபர்கள் சடலங்களை தண்டவாளத்தில் வீசினர். வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே லத்தேரி அடுத்த ஜங்காலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் புனிதவள்ளி. அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினர் அருள் மகள் சவுந்தர்யா. பத்தாம் வகுப்பு படித்து விட்டு, வீட்டிலேயே இருந்தார். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதால், எப்போதும் இணை பிரியாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் வழக்கம்போல், பள்ளிக்கு சென்ற புனிதவள்ளி, மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். மாலை, 5:30 மணியளவில், அவர் சவுந்தர்யாவுடன் வெளியே சென்றார். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும், அவர்கள் வீடு திரும்பவில்லை.

இதனால், அவர்களது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும், உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளுக்கு சென்று விசாரித்து பார்த்தனர்.

ஆனால், அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணியளவில், காட்பாடி அடுத்த கரசமங்கலம் ரயில்வே கேட் தண்டவாளம் அருகே, இரண்டு இளம்பெண்கள் ரத்த வெள்ளத்தில்  இறந்து கிடந்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் படி, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்தனர்.

விசாரணையில், அங்கு இறந்து கிடந்தவர்கள், பிளஸ் 2 மாணவி புனிதவள்ளி மற்றும் அவரது தோழி சவுந்தர்யா என்பது தெரியவந்தது. இதற்கிடையில், அவர்களது பெற்றோர் சம்பவ இடத்துக்கு, பதறி அடித்து வந்தனர். அவர்கள் சடலங்களை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து, ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.