Show all

சென்னையில் கொடூரம்! பெருங்குடி குப்பைமேட்டில் குப்பையுடன் சிப்பம் செய்யப்பட்டு வந்த இளம்பெண் உடல் பாகங்கள்

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை பெருங்குடி குப்பைமேட்டில் குப்பையுடன் குப்பையாக இளம்பெண்ணின் கை, கால்கள் சிப்;பம் செய்யப்பட்டு வந்தது கண்ட மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தக் குப்பைக் கிடங்கு சென்னையில் முதன்மையான குப்பைக்கிடங்கு. சென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி குப்பைக்கிடங்கு மற்றும் கொடுங்கையூர் குப்பைகிடங்குக்கு கொண்டு செல்லப்படும்.

சுமையுந்துகள் மூலம் சேகரிக்கப்பட்ட குப்பைகள் இங்கு கொண்டுவரப்படும். பின்னர் இங்கு மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என ஊழியர்கள் தரம் பிரிப்பார்கள். சென்னை முழுதும் ஆங்காங்கே சேகரிக்கப்படும் குப்பைகள் நுங்கம்பாக்கம், ஐஸ் ஹவுஸ், புளியந்தோப்பு, புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சேகரிக்கப்பட்டு பின்னர் பெருங்குடி, கொடுங்கையூருக்கு கொண்டுச் செல்லப்படும்.

சென்னையில் ஒரு நாளைக்கு சுமார் 5000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இப்படி வந்த குப்பையில்தான் இளம்பெண்ணின் உடலின் கை, கால்களை மட்டுமே சிப்பம் செய்யப்பட்டு பெருங்குடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இளம்பெண்ணைக் கொலை செய்து உடலை கச்சிதமாக சிப்பம் செய்து குப்பையில் வீசியுள்ளது ஒரு கும்பல்.

இதுகுறித்த தகவல் அறிந்த பள்ளிக்கரணை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடல் வந்த சுமையுந்து குறித்து விசாரணை நடத்தியதில் அது கோடம்பாக்கம் மின்நிலையத்திலிருந்து குப்பையை ஏற்றிவந்தது தெரியவந்துள்ளது.

ஆகவே கொலை செய்யப்பட்ட பெண் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் அல்லது கொலை செய்து ஒரு இடத்தில் சிப்பம் செய்து காவல்துறையினரை குழப்ப அங்கு வந்து சிப்பத்தை வீசிவிட்டு சென்றிருக்கலாம் என காவல் துறையினர் கருதுகின்றனர். கை, கால்கள் அழுகாத நிலையில் உள்ளதால் நேற்றிரவு கொலை நடந்திருக்கலாம் என காவல் துறையினர் கருதுகின்றனர்.

30-லிருந்து 35 அகவை மதிக்கத்தக்க அப்பெண்ணின் கையில் இரண்டு இடங்களில் நவீன பச்சைக்குத்தப்பட்டுள்ளது. உடலின் நிறம், டாட்டு என்கிற  நவீன பச்சைக்குத்தலை வைத்து பார்க்கும்போது அப்பெண் வசதியானவர் என்று காவல் துறையினர் கருதுகின்றனர். கால்களில் மெட்டி உள்ளதால் திருமணமான பெண் என கருதுகின்றனர்.

மேலும் கொலை செய்யப்படுவதற்கு முன் அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளதாக காவல் துறையினர் கருதுகின்றனர். கை, கால்கள் மட்டும் கிடைத்த நிலையில் உடல் எங்கே என காவல் துறையினர் தேடுகின்றனர். நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டும் இடத்தில் உள்ள கண்காணிப்பு படக்கருவிகளை பரிசோதிக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் அந்த இடத்தில் தேடிப்பார்த்தும் உடலின் மற்ற பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து காவல் துறையினர்  கோடம்பாக்கம் பகுதியில் அண்;மையில் பெண்கள் யாராவது காணாமல் போனார்களா? என்ற தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். வலது கையில் பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் படம் பச்சை குத்தப்பட்டுள்ளது.

பெண்ணின் கைரேகைப் பதிவை எடுத்து ஆதார் எண்  மூலம் யார் என அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறையினர் இறங்க உள்ளனர். அந்த பெண் யார்? எந்த ஊரை? சேர்ந்தவர் என்ற விவரம் தெரிந்தால் தான் கொலைக்கான காரணம், எப்படி நடந்தது என்பது தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.      

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,039.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.