Show all

இதோ இரு வேறு பள்ளிகளில் மாணவர்களுக்குச் சீருடை வேட்டி சட்டை தான்!

மதுரையில் டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை வேட்டி சட்டைதான்!

இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது . அந்தப் பள்ளியின் மாணவர்கள். சாலையில் அணி அணியாக நடந்து வந்தால், ஏதோ அரசியல் கட்சி ஊர்வலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அவர்கள் உடுத்தி இருப்பது சாரதி வேட்டியோ, பாலியெஸ்டர் வேட்டியோ கிடையாது. கதர் வேட்டிதான். வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் தயாரிக்கும் முறையையும் பள்ளியிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள்.

 

பள்ளியில் ஆசிரியைகளை அக்கா என்றும், ஆசிரியர்களை ஐயா என்றும் உறவு சொல்லி அழைக்கிறார்கள் மாணவ- மாணவிகள்.

     தலைமை ஆசிரியருக்கும் விதிவிலக்கு கிடையாது. வகுப்பு மாணவர்கள் வேட்டி அணிவதைப்போல, மாணவிகள் பாவாடை தாவணி அணிகிறார்கள். சிறு குழந்தைகளும் கூட வாரத்தில் மூன்று நாட்கள் கதர் ஆடை மட்டுமே அணிகிறார்கள். திங்கள் கிழமை தோறும் நடக்கும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேச பக்திப் பாடல்களை மாணவர்கள் பாடுவார்கள் . புதன்தோறும் நடைபெறும் சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பைபிள், பகவத் கீதை, குர்ஆன், திருக்குறளையும் சேர்த்து வாசிப்பார்கள். ஒழுக்கத்துக்குப் பெயர் பெற்ற பள்ளி இது. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின்போது மாணவர்களைக் கண்காணிக்கவே தேவை இல்லை. காப்பி அடிக்காமல் சுய ஒழுங்கைக் கடைப்பிடிப்பார்கள்.

 

     நாட்டின் உயர்வகுப்பு கிளப்கள் வேட்டி அணிந்து வருபவர்களுக்கு அனுமதி மறுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை பள்ளி ஒன்று 60 ஆண்டுகளாக மாணவர்களுக்கு வேட்டியைச் சீருடையாக வைத்துச் செயல்பட்டு வருகிறது.

 

சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ அகோபில மடம் மேனிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் வேட்டி,  சட்டை அணிந்து வருவதே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் வேட்டியே அணிந்து வரவேண்டும்.

 

இது குறித்து அகோபில மடம் பள்ளியின் முதல்வர் உமா, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

 

1953ஆம் ஆண்டு இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. அப்போது முதலே வேட்டி,  சட்டை சீருடையே நடைமுறையில் உள்ளது.

 

சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிப் பிரிவினர்கள், முஸ்லிம்கள் என்று அனைத்து தரப்பினரும் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். அனைவரும் வேட்டி-சட்டைத் தான் அணிந்து வரவேண்டும்.

மாணவிகள் பாவாடை-தாவணி சீருடையே அணிந்து வரவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.