Show all

இரண்டு இலட்சம் வைப்பு நிதி கொடுங்கள் அல்லது பள்ளிகளை மூடுவோம்! நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளி அதிரடி

05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையை அடுத்த குரோம்பேட்டையில், சுந்தரவல்லி நினைவு அறக்கட்டளை செயல்படுகிறது. இதற்கு சொந்தமாக, குரோம்பேட்டை மற்றும் பெருங்களத்தூரில், நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில், சுந்தரவல்லி நினைவு பள்ளி மற்றும் சென்னை கோபாலபுரத்தில் சாரதா இடைநிலை பள்ளி ஆகியவை செயல்படுகின்றன.

இதில், சுந்தரவல்லி நினைவு பள்ளிகளில், ஒவ்வொரு மாணவருக்கும், வைப்புத் தொகையை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி, பள்ளி நிர்வாகம் திடீரென அறிவிப்பு வெளியிட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் பேசி, வைப்புத் தொகை உயர்வு அறிவிப்பை ரத்து செய்ய கோரினர்; பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது.

இதையடுத்து, பெற்றோர் ஏராளமானோர், குரோம்பேட்டை மற்றும் பெருங்களத்தூரில் உள்ள பள்ளிகளை, நேற்று திடீரென முற்றுகையிட்டனர். இது குறித்து, தகவல் அறிந்த காவல்துறையினர், பெற்றோரை பள்ளியின் அருகே விடாமல் தடுத்தனர்.

போராட்டம் குறித்து கேள்விப்பட்ட பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தனியார் பள்ளிகளுக்கான பதின்ம இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர், நரேஷ் ஆகியோர், அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தினர். 

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, ஆஞ்சலோ இருதயசாமி, பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். போராட்டம் நடத்தியவர்களிடமும், பள்ளியின் தாளாளர், சந்தானத்துடனும் பேச்சு நடத்தினார். பள்ளியின், வைப்புத்தொகை குறித்த சுற்றறிக்கையை ரத்து செய்யும்படி அறிவுறுத்தப் பட்டது.

இந்நிலையில், பள்ளிகளின் தாளாளர், கே.சந்தானம், திடீரென, இணையதளத்தில் வெளியிட்ட சுற்றறிக்கை: குரோம்பேட்டை மற்றும் பெருங்களத்தூர் பள்ளிகளின் முன், பெற்றோர் என்ற போர்வையில், கட்டுக்கடங்காத கூட்டத்தினர், சட்டவிரோதமாக கூடினர். காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் உதவியை நாங்கள் நாடினோம். அவர்களோ, பள்ளியின் மதிப்பையும், கவுரவத்தையும் எண்ணாமல், கூட்டத்தை சமாளிக்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டனர். 

பள்ளி முன் கூடிய கூட்டத்தினர், வளாகத்தில் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை காட்டினர். பள்ளி வளாகத்தில் மாணவ - மாணவியர், ஊழியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான, இதுபோன்ற அசிங்கமான, சட்ட விரோதமான நிகழ்வுகளை தாங்கி கொள்ள முடியாது. எனவே, கனத்த இதயத்துடன், இரண்டு விதமான முடிவுகளில், ஒன்றை எடுக்க உள்ளோம்.

முதலாவதாக, சட்டம் அனுமதித்தால், இந்த கல்வி ஆண்டின் பாதியிலேயே, இரண்டு பள்ளிகளையும், மூட உள்ளோம். அந்த நிலை ஏற்பட்டால், மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க, பெற்றோருக்கு அவகாசம் தருவோம்.

இல்லாவிட்டால், இந்தக் கல்வி ஆண்டின் இறுதியில், இரண்டு பள்ளிகளையும் மூட உள்ளோம். இதற்கு, சட்டம் அனுமதிக்கும் என, நம்புகிறேன்

இரண்டாவதாக, இதுபோன்ற மன வேதனை, சித்ரவதைகள் எங்கள் மாணவர்களுக்கு நேராமல் இருக்கும் வகையில், பள்ளி நிர்வாகத்தை, வேறு ஒரு அமைப்பிடம் மாற்றுவது குறித்து ஆய்வு செய்வோம். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பள்ளியின் அறிவிப்பு குறித்து, கல்வி அதிகாரிகள் கூறியதாவது: பள்ளி நிர்வாகத் திடம் பேசி வருகிறோம்; வைப்புத் தொகை கேட்க பள்ளிக்கல்வி விதிகளில் இடமில்லை. பள்ளி அங்கீகாரம், தடையில்லா சான்று மற்றும் நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரிய இணைப்பு பெறும்போது, மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு தருகிறோம்; பள்ளியை இடையிலேயே மூடமாட்டோம் என, எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்த பிறகே, அங்கீகாரம் தரப்படுகிறது.

இதனால், திடீரென பள்ளியை மூடுவோம் என்று அறிவிப்பது, நிறுவனத்தின் மீதான நம்பகத் தன்மையை குலைப்பதாகவும், விதியை மீறுவதாகவும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,855.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.