ஜோதிமணிக்கு இளங்கோவன் கடும் எச்சரிக்கை அரவக்குறிச்சி தொகுதியில் ஜோதிமணி சுயேச்சையாக போட்டியிட்டால்,
அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரித்தார். சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தமிழக
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், திமுக கூட்டணியில் அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸ்
கட்சிக்கு ஒதுக்கப்படாதது ஏமாற்றம்தான். ஆனால், அந்த ஏமாற்றத்தை ஜோதிமணி தாங்கிக் கொண்டுதான்
ஆக வேண்டும். காங்கிரஸ் கட்சியில் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
எனவே, இதனை பெரிதாக்காமல் அதற்கு மாறாக அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் கூட்டணி
கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக ஜோதிமணி பிரசாரம் செய்ய வேண்டும் என்றார். ஜோதிமணி சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது
தொடர்பான கேள்விக்கு, ஜோதிமணி கோபத்தில் அவ்வாறு கூறியிருக்கிறார். அந்த
எண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியை மீறி சுயேச்சையாகத்தான் போட்டியிடுவேன்
என ஜோதிமணி பிடிவாதமாக இருந்தால் அவர் மீது கட்சி ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்றார். முன்னதாக ஜோதிமணி பேசும்போது, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அரவக்குறிச்சி தொகுதியைப் பெறுவதற்காக போதுமான
அழுத்தம் கொடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.