Show all

பெண்ணினத்தை அவமதித்த தயாசங்கர் சிங்கை பாஜகவிலிருந்தே நீக்க வேண்டும்

உத்த பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும் பகுஜன் சமாஜ்கட்சியின் தலைவருமான மாயாவதியை பாஜக பிரமுகர் தயாசங்கர் சிங் விலைமகளுடன் ஓப்பிட்டு பேசியது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. தயாசங்கர் சிங்கின் இந்த கருத்துக்கு நடுவண் அமைச்சர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், முதல் அமைச்சர் ஜெயலலிதாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடுக்கப்பட்டவர்களின் நிகரில்லாத் தலைவராக உத்திரப் பிரதேச மாநிலத்தைசேர்ந்தவர்களாலும், மற்றவர்களாலும் மதிக்கப்படுபவர் மரியாதைக்குரிய சகோதரி பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வி மாயாவதி ஆவார். சமீபத்தில் குஜராத்தில் நடந்த நிகழ்வை கண்டித்து இவர் கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார். அதன் காரணமாகவோ, என்னவோ, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராக உள்ள திரு.தயாசங்கர் சிங் என்பவர் மிகவும் மோசமான, ஆபாசமான, அருவருக்கத்தக்க வகையில் செல்வி மாயாவதியைப் பற்றி விமர்சித்துள்ளார். அரசியலில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது என்பது எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது. அதுவும் தயாசங்கர் சிங் பயன்படுத்திய வார்த்தைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். அவர் சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் இழுக்கை தேடித் தருவதாகவே இது உள்ளது. அரசியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்கள் இது போன்ற கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. எனது அரசியல் வாழ்வில் இது போன்ற துன்பங்களை நான் அனுபவித்துள்ளேன். வார்த்தை சவுக்கடிகளால் தாக்கப்பட்ட செல்வி மாயாவதியின்பால் எனது இதயம் கசிந்து உருகுகிறது. பெண் அரசியல்வாதிகள் மீது தொடுக்கப்படும் இது போன்ற தாக்குதல்கள் இத்துடனாவது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். திரு. தயாசங்கர் சிங் அவர்களின் விமர்சனத்திற்கு நாடாளுமன்றத்தில் மாண்புமிகு நடுவண் நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்கள் வருத்தம் தெரிவித்திருப்பதும் பாரதிய ஜனதா கட்சி திரு. தயாசங்கர் சிங் அவர்களை உத்தரப் பிரேதச மாநில கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்துள்ளதும் ஆறுதல் அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்த நடவடிக்கை போதுமானதல்ல. பெண்ணினத்தை அவமதித்த திரு.தயாசங்கர் சிங்பாரதிய ஜனதா கட்சியிலிருந்தே நீக்கப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சித் தலைவரை நான் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.