Show all

மறைந்தார்; ஆனால் மறையவில்லை; ஊண்உடலால் மறைந்தார்; புகழுடல் தமிழ்மண்ணில் நடுகல்லாய் நிற்கும்! நெல் செயராமன்

22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த இயற்கை உழவர் நெல் செயராமனின் உடல் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அவரது சொந்த ஊரில்  தகனம் செய்யப்பட்டது. 

நாம் மறந்த, அல்லது அரசியலால் இழந்த அனைத்து பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்க வேண்டும் என்ற பெருங்கனவு கண்டவர் எப்போதும் எழாத உறக்கத்திற்கு சென்றுவிட்டார்.

முன்னம் இவர் கட்டிமேடு செயராமன்தான். நுகர்வோர் உரிமைக்காக தனது கிராம அளவில் அப்போது தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது கவனம் மரபு நெல் ரகங்களின் மேல் குவிந்திருந்தது. அதற்கு நம்மாழ்வாருடன் ஏற்பட்ட நட்பும் ஒரு காரணம்.

காட்டு யானம், பூங்கார், குடவாலை என அவர் மீட்ட நெல் ரகங்கள். மரபு நெல்லை மீட்க அவர் மேற்கொண்ட நெடும் பயணம் அந்த நெடும் பயணத்தில் முடிவில் அவர் மீட்ட ஏழு வகை நெல் ரகங்கள், அவர் வாழ்க்கையின் திசை வழியையே மாற்றியது. அதுவரை நுகர்வோர் உரிமைக்காக போராடியவர், அதன் பின் மரபு ரக நெல் வகைகளை மீட்கும், பரப்பும் பணிக்கு தம்மை அர்பணித்து கொண்டார்.

மகசூல் என்ற சொல்லுக்கு பலருக்கும் பொருள் புரியாது. அனைத்து நெல் ரகங்களின் அறுவடை காலமும் ஒன்று என்றே நினைத்திருப்போம். ஆனால், நெல் அறுவடை காலம் என்பது ரகத்திற்கு ஏற்றார் போல மாறுபடும். குறைந்தபட்சமாக பூங்கார் 70 நாளிலும், ஒட்டையான் 200 நாளிலும் அறுவடைக்கு வரும் என்றெல்லாம் கண்டு சொன்னவர் செயராமன்.

ஒரு சொல்லோ, பொருளோ தொடர்ந்து நடைமுறை வழக்கத்தில் இருந்தால்தான், அவை உயிர்ப்புடன் இருக்கும். இது நெல்லிற்கும் பொருந்தும். ஒரு நெல்லை மீட்பது, காப்பது என்பது, அதனை தொடர்ந்து விதைப்பது. நெல் செயராமன் விதைத்தால் மட்டும் போதாது. பல நெல் செயராமன்கள் உருவாக வேண்டும். இதற்காகதான் அவர் நெல் திருவிழாவை ஒருங்கிணைத்தார்.

திருத்துறைப்பூண்டி ஆதிரங்கத்தில் அவர் ஆண்டாண்டும் ஒருங்கிணைத்திருத்த நெல் திருவிழாவிற்கு மரியாதை கூடிக் கொண்டே வந்தது. நெல்லை மீட்பதைவிட, அதை பாதுகாப்பது தான் சிரமமாக இருக்கிறது என்றார் அவர்.

அதற்கு காரணம் அப்போது உழவர்கள் மனதில் படிந்திருந்த எண்ணம். மரபு ரக நெல் வகைகள் விளைச்சல் தராது, நட்டம் ஏற்படும் என உழவர்கள் ஆழமாக நம்பினார்கள். இந்த அவநம்பிக்கையை கலைப்பதுதான் கடினமாக இருந்தது என்றார்.

நம்பிக்கை தளராமல் பயணித்த நெல் செயராமன், மரபு ரக நெல்லின் வணிகத்தையும் உறுதிபடுத்தினார். குறிப்பாக நாகபட்டினத்தில், உழவர் சோமு கூறியவை, 'நான் வேளாண்மையிலிருந்து வெளியேற எண்ணினேன். ஆழிப்பேரலைக்குப் பிறகு கடல் நீர் உட்புகுந்து நிலமெங்கும் உப்பு பூத்துவிட்டது. அந்த சமயத்தில் நெல் செயராமன் கொடுத்த பூங்கார் நெல் ரகம்தான் நான் என் நிலத்தில் இன்னும் ஊன்றி நிற்க காரணம்' என்றார்.

இப்படிதான் பலரை நம்பிக்கை திசையில் பயணிக்க வைத்திருக்கிறார் செயராமன். புற்று நோய் வந்த பின்பு, அவர் கலந்து கொண்ட ஓர் கூட்டத்தில், எனக்கு புற்றுநோய். என் மரணத்தை தள்ளி போட்டுக் கொண்டிருப்பது மரபு நெல் ரகங்கள்தான் என்று இறப்பை நோக்கிய பயணத்தையும் மரபு நெல்லை பரப்பும் கருத்துப் பரப்புதலாக மாற்றினார்.

பூவுலகு நண்பர்கள் தனது அஞ்சலி பகிர்வில் கூறி இருந்ததை கோடிட்டு சொல்லியாக வேண்டும். 'விதைநெல், நடுகல்லாக மாறிவிட்டது.'

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,995.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.