Show all

தருமபுரி, பேருந்துஎரிப்பு மூவர் உள்ளனர்; 7தமிழர் இல்லை! எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டிய சிறைக் கைதிகள் விடுதலையில்

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே உணவக வழக்கில் மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான செயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு அறங்கூற்றுமன்றம் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவினர் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தருமபுரி அருகே கோவை அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் வந்த பேருந்தை அதிமுகவினர் சிலர் தீவைத்து எரித்தனர். இதில் பேருந்துக்குள் இருந்த கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா என்ற, மூன்று மாணவியர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இதையடுத்து, பேருந்துக்கு தீ வைத்ததாக அதிமுகவைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதித்து விசாரணை அறங்கூற்றுமன்றம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பளித்தது.

உச்சஅறங்கூற்றுமன்றத்தில் மறுசீராய்வு செய்யப்பட்ட நிலையில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி இதுவரை 1,600 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூன்று பேரையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.

தமிழக ஆளுநரும் ஆய்வு செய்துவிட்டு, அரசின் கோரிக்கையை நிராகரித்து கோப்பை கடந்த மாதம் திருப்பி அனுப்பி விட்டார்.

இதையடுத்து அதே கோப்பை 2-ஆவது முறையாக அனுப்பிய நிலையில் அதை ஆளுநர் ஏற்றுக் கொண்டுவிட்டார். இதையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். 18 ஆண்டுகளாக சிறையில் இருந்த மூவரும் விடுதலை சரி. 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு தமிழர்கள் விடுதலை எப்போது?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,976.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.