Show all

45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள வியாபம் முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் மரணம்

நாட்டையே உலுக்கிய வியாபம் முறைகேடு வழக்கில் மற்றொரு திருப்பமாக வியாபம் தேர்வுகளில் நடுவண் அரசின் பார்வையாளராக இருந்தவர் மர்மான முறையில் மரணம்அடைந்துள்ளார்.

மத்திய பிரதேசத் தொழில் முறை தேர்வு வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய நுழைவுத் தேர்வுகளில் பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது கண்டறியப்பட்டது.

இந்த ஊழலில் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.  

இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் இந்த வழக்கின் விசாரணையைக் கடந்த ஜூலை மாதம்முதல் சி.பி.ஐ., மேற்கொண்டு வருகிறது.

டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் உட்பட இதுவரை இவ்வழக்கில் தொடர்புடைய 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மர்ம மரணங்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், வியாபம் தொடர்பான இரண்டு தேர்வுகளில் நடுவண் அரசின் பார்வையாளராகப் பணியாற்றிய விஜய்பஹதூர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார்.

முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரியான விஜய்பஹதூர் ஒடிசா மாநிலம் ஜர்சுகுடாவில், ரயில்வே தண்டவாளம் அருகில் சடலமாக மீட்கப்பட்டார். முன்னதாக, பூரி-ஜோத்பூர் ரயிலில் தனது மனைவியுடன் அவர் பயணித்ததாக கூறப்படுகிறது.

இந்த மர்ம மரணம் குறித்து, ஒடிசா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  முதற்கட்ட தகவல்களின்படி ஓடும் ரயிலில் இருந்து அவர் தவறி விழுந்து  இருக்கலாம் என தெரிவதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே அறிக்கையின் அடிப்படையில் அவரது மரணம் குறித்த விசாரணை செல்லும் எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.