Show all

ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டும் முயற்சி; அனுமதிக்கு கண்டனம்! அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை நடுவண் அரசு ரத்து செய்யக்கோரி இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே ஆடுதாண்டும்;; காவிரியில் புதிய அணை ஒன்றை ரூ.6 ஆயிரம் கோடி செலவில் கட்ட முடிவு செய்த வரைவு திட்டத்துக்கு, நடுவண் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தின் அனைத்து முதன்மைக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

நடுவண் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். மேலும் தமிழக அரசு நாளை இது தொடர்பாக உச்ச அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடர உள்ளது.

இந்த நிலையில், நடுவண் அரசின் அணை அனுமதி குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை தி.மு.க. இன்று கூட்டியது. அண்ணா அறிவாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்த அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. உள்பட 9 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் கஜா புயலின் கோர தாண்டவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் எழுந்து நின்று அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

 

 

 

 

கூட்டத்தில் ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை நடுவண் அரசு ரத்து செய்யக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழகத்தில் மிச்சமிருக்கும் வேளாண் தொழிலையும் அழித்தொழித்து, குடிநீர் சேகரிப்பதற்காக ஏற்கனவே தாய் மார்கள் அனுபவித்து வரும் துன்பங்களைப் பன்மடங்கு பெருக்கிடும் வகையில், காவிரியின் குறுக்கே ஆடுதாண்டும் காவிரியில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுத்திருக்கும் நடுவண் பா.ஜ.க. அரசுக்கு, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

5,912 கோடி ரூபாய் மதிப்பில் 66 டி.எம்.சி. காவிரி நீரை தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதும், அதன் மூலம் அம்மாநிலத்தின் விவசாய நிலப்பரப்புகளை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொள்ளத் திட்டமிடுவதும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கும் அந்த இறுதித் தீர்ப்பை உறுதி செய்த உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பிற்கும் முற்றிலும் எதிரானது.

காவிரி விவகாரத்தில் தொடக்கம் முதலே அறங்கூற்றுமன்றங்களின் தீர்ப்புகளைச் சிறிதும் மதிக்காமலும் அவற்றிற்கு எதிராகவும் தன்னிச்சையாகச் செயல்பட்டு வரும் கர்நாடக மாநில அரசு, தமிழகத்தின் கருத்தினைக் கேட்காமல் புதிய அணை கட்டுவது, கூட்டாட்சிக் கொள்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் முயற்சி என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் எடுத்துக்காட்ட விரும்புகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் கட்சி பேதம் கருதாமல் பொது நலனுக்காக ஒன்றிணைந்து, நரேந்திரமோடியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது.

அதுமட்டுமன்றி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஏகோபித்த உணர்வுகளையும் ஏழரைக் கோடி தமிழக மக்களின் உணர்வுகளையும் உதாசீனப்படுத்திவிட்டு, தேர்தல் ஆதாயம் ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு 'அறங்கூற்றுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் அல்லது தமிழகம் புதிய அணை எதுவும் கட்டக்கூடாது. காவிரி விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் வாரியமே எடுக்கும். நடுவண் அரசுக்கு இதில் தலையிடும் அதிகாரம் கிடையாது' என்றும் உச்சஅறங்கூற்றுமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக, கர்நாடகாவில் புதிய அணை கட்ட நடுவண் பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கியிருப்பது, தமிழகத்தை வஞ்சிக்கும் சூழ்ச்சியாகும்.

நடுவண் பாஜக அரசின் இந்த அனுமதி, காவிரி கழிமுகப் பகுதியை பாலைவனமாக்கி, கார்ப்பரேட்டுகளின் பெட்ரோலியப் பொருள்கள் வேட்டையை ஊக்கப்படுத்தி, தமிழகத்தின் வேளாண் பொருளாதார முன்னேற்றத்தைத் தரை மட்டமாக்கிப் புதைத்து விடும் படுபயங்கர வஞ்சக நடவடிக்கையின் பிரதிபலிப்பே ஆகும்.

'கடிதம்' எழுதி விட்டாலே 'கடமை' முடிந்து விட்டது என்று அ.தி.மு.க. அரசு, அலட்சியத்தின் மொத்த உருவமாக இருந்ததால்தான் இன்றைக்கு, மோடி அரசு விளைவுகளைப் பற்றிய சரியான மதிப்பீடும் பார்வையும் இல்லாமல், இந்த அனுமதியை சர்வ சாதாரணமாக வழங்கி தமிழக மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது; வெந்தணலில் தள்ளுகிறது.

தமிழக உரிமைகளை- நடுவண் அரசிடமும், அண்டை மாநிலங்களிடமும் அ.தி.மு.க. அரசு பறிகொடுத்துக் கொண்டிருப்பது தமிழக உழவர்களுக்கும், பொது மக்களுக்கும் தீராத தொல்லையாகவும், தீர்க்க முடியாத வாழ்வாதாரப் பிரச்சனையாகவும் மாறும் பேரிடர் உருவாகி வருகிறது.

அடிக்கடி நடுவண் அமைச்சர்களையும், தலைமை அமைச்சரையும் சந்திக்கும் அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் 'மாநில நலனுக்காகவே மோடி அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்' என்று அறிவித்தாலும், இந்த அணை கட்டுவதற்கான நடுவண் அரசு அனுமதியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வேதனையுடன் பதிவு செய்து, தங்கள் சுயநலத்தைத் தவிர, மாநிலத்தின் பொதுநலன் பற்றிக் கவலையில்லை என்ற போக்கில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு தமிழகத்திற்குப் பெருந்தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது என்று ஆழ்ந்த கவலை கொள்கிறது.

எனவே, இந்த புதிய அணை கட்டும் கர்நாடகாவின் 'விரிவான திட்ட மதிப்பீட்டறிக்கை' தயாரிப்பதற்கு நடுவண் அரசு கொடுத்துள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இது போன்று தன்விருப்பம் போல் புதிய அணை கட்டி தமிழகத்தின் வேளாண்மையையும், குடிநீர்த் தேவையையும் வஞ்சிக்கும் முயற்சிகளில் கர்நாடக மாநில அரசு ஈடுபடக் கூடாது எனவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

அ.தி.மு.க. அரசு உடனடியாக உச்சஅறங்கூற்றுமன்றத்தை அணுகி இந்த அனுமதியை ரத்து செய்ய தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், நடைபெற இருக்கின்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகத்தைப் பாதிக்கும் நடுவண் அரசின் ஒருதலைபட்சமான போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி இந்த அனுமதியை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றி, நடுவண் அரசை வற்புறுத்த வேண்டுமெனவும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இந்த அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை பாஜக நடுவண் அரசு ரத்து செய்யக் கோரி வருகின்ற செவ்வாய் கிழமை அன்று காலை 10 மணியளவில் திருச்சி மாநகரில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் 'மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் தி.மு.க. சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டனர். திராவிடர் கழகம் சார்பில் வி.அன்புராஜ், கலிபூங்குன்றம் பங்கேற்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், மு.வீரபாண்டியன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அபுபக்கர் எம்.எல்.ஏ., யூசுப் குலாம் முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார், மனித நேய மக்கள் கட்சி தலைவர் பொதுச்செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் கோவை உமர் உள்ளிட்ட 9 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,986.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.