Show all

திமுக கோட்டை விடுவதற்கு நடுசென்னை வாய்ப்பாகும்! 1.தினகரன்தானே 2.சிறுபான்மையினர் கட்சிதானே என்று இளப்பமாக நினைத்து

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்றத் தேர்தலில் பல்வேறு முனைப்போட்டியாக இந்த தேர்தல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கடந்த தேர்தலில் தனித்து களம் கண்டு தமிழகத்தில் 39 க்கு 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை பாஜக, பாமக, தேமுதிக என கூட்டணி கட்சிகளொடு களமிறங்குகிறது.

இந்த நிலையில் திமுகவும் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து களமிறங்குகிறது.

கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் இரு கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த கால மக்களவை தேர்தல் வெற்றியும், தோல்வியும் நடு சென்னையில் தற்போதைய வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து பார்ப்போம்.

இதில் நடு சென்னை தொகுதியில் திமுக  நேரடியாக களம் காண்கிறது. இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் திமுக சார்பில் களமிறங்குகிறார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற 14 வது மக்களவை தேர்தலில் தயாநிதி மாறன் 3,16,329 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு 15 வது மக்களவை தேர்தலில் அதே தொகுதியில் தயாநிதி மாறன் 2,85,783 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மக்களவை தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்ட  தயாநிதி மாறன் 2,87,455 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயக்குமார் 3,33,296 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார்.

அதிமுக கூட்டணி கட்சியான பாமக சார்பில் இந்த தொகுதியில் சாம் பால் போட்டியிடுகிறார்.

தினகரன் கட்சியான அமமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியான இந்திய சமூக ஜனநாயக கட்சி சார்பில் தெஹ்லான் பாகவி போட்டியிடுகிறார்.

அதிமுக வெற்றி கேள்விக்குறி என்பதாலேயே அது கூட்டணியை நாடியுள்ள நிலையில், பாமக வெற்றி வாய்ப்பு அரிதிலும் அரிதான ஒன்றாக கருதப்படுகிறது.

தினகரன் தோழமை கட்சிக்காக கடுமையாக பணியாற்றி, முன்னாள் அதிமுகவின் விஜயக்குமார் பெற்ற 3,33,296 வாக்குகளை அப்படியே பெற்றுத் தருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாக இருக்கிற காரணத்தால், சிறுபான்மையினர் அதிகம் அங்கம் வகிக்கும் தொகுதியான நடு சென்னை தொகுதியில் சிறுபான்மை அதிகம் கொண்ட கட்சியான இந்திய சமூக ஜனநாயக கட்சி அமமுக கூட்டணியில் போட்டியிடுவது தயாநிதிமாறனுக்கு அதிகம் நெருக்கடியை கொடுக்கும் என தெரிகிறது.

அதிமுக வாக்குகள் மட்டுமல்லாது, இசுலாமியர்களின் வாக்குககள் அதிகம் பிரியும் என்பதால் இந்த தொகுதியில் தினகரன் கூட்டணிக் கட்சியான இந்திய சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. மீறி தயாநிதிமாறன் வெற்றி பெறுவதற்கு நிறைய உழைப்பை தரவேண்டியிருக்கும். 

மற்றும் 1.தினகரன்தானே 2.சிறுபான்மையினர் கட்சிதானே என்று திமுக இளப்பமாக நினைத்து நடு சென்னை தொகுதியை கோட்டை விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,095.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.