மின்னணு குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறிய தாவது: கடந்த 5 ஆண்டுகளில் உணவுத் துறைக்காக ரூ.24,400 கோடி ஒதுக்கப்பட்டது. திமுக ஆட்சிக்காலத்தில் ரூ.14,550 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. திமுக ஆட்சியைவிட ரூ.9,850 கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34,686 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. புதிய குடும்ப அட்டை கோரி மனு அளிப்பவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் 60 நாட்களுக்குள் அட்டை வழங்கப் படுகிறது. கடந்த 2011 ஜூன் முதல் 2016 ஜூன் 30 வரை 16 லட்சத்து 20 ஆயிரத்து 388 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சீர்மிகு அட்டை எனும் மின்னணு குடும்ப அட்டை வழங்க கடந்த நிதியாண்டில் ரூ.318.40 கோடி ஒதுக்கப்பட்டது. நடுவண் அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் முடிந்ததும், மின்னணு குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.