Show all

பக்ரீத் திருநாளையொட்டி தலைவர்கள் வாழ்த்து!

பக்ரீத் திருநாளையொட்டி ஆளுநர் ரோசய்யா மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ரோசய்யா

பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் முசுலிம் சகோதரர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகத் திருநாளான இந்தத் திருவிழா சகோதரத்துவம், நல்லிணக்கத்தை மேம்படுத்தட்டும்!

முதல்வர் செல்வி.ஜெயலலிதா 

பக்ரீத் தியாகத் திருநாளில், பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், துன்பப்படுபவர்களுக்கு உதவிபுரியுங்கள் என்பது போன்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி

தியாகத்திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இசுலாமிய சமுதாய மக்களால் மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது. ‘இசுலாம்’ என்பது ஒரு சமயம் அல்லது மதம் என்று கூறுவதைவிட, அது ஒரு ‘வாழ்க்கை நெறி’ என்றே கூறலாம் என பேரறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் எக்காலத்திலும், எந்நாளிலும் இசுலாமிய மக்களின்பால் பரிவு கொண்டுள்ள இயக்கமாகும். இசுலாமிய சமுதாய மக்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்தி வரும் உணர்வோடு; பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இசுலாமிய உடன் பிறப்புகளின் குடும்பத்தார் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகி இன்பம் நிலவிட எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

தியாகத் திருநாள் என்று கூறப்படும் பக்ரீத் பண்டிகையை, இசுலாமிய சமுதாய மக்கள் குர்பானி வழங்கி கொண்டாடி வருகிறார்கள். ஏழை, பணக்காரன், இருப்பவர், இல்லாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கின்ற எவ்வித பாகுபாடும் இல்லாமல் தியாகத்தையும், ஈகையையும் போற்றுகின்ற வகையில் இந்தநாள் கொண்டாடப்படுகிறது. அனைவரும் பகிர்ந்துண்டு வாழுகின்ற, சமதர்ம நெறியை போற்றும் வகையில் குர்பானி வழங்கி கொண்டாடும் இசுலாமிய பெருமக்களுக்கு எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களைத் தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசு

உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதும் இந்த தியாகத் திருநாள் மூலம் உணர்த்தப்படுகிறது. அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனைத் தியாகச் செயல்கள் மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும். இறைவனின் கட்டளையை இறைதூதர் இப்ராகிம் எப்படி பின்பற்றினாரோ அதேபோல் முகமது நபிகளின் போதனையை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க இந்த நன்னாளில் இசுலாமிய பெருமக்களோடு இணைந்து அனைவரும் சபதம் ஏற்போம்.

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்

இந்த ஆண்டு அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் முதல் பிறை தெரிந்ததால் வருகின்ற 24 ஆம் தேதி உலகம் முழுவதும் ஒரே நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு உதவுகின்ற இந்தத் தியாகத் திருநாளில் நாம் நமது இசுலாமிய சமுதாயத்தினர் மீது அன்பு பாராட்டுவோம்; அவர்களுக்கு அரணாக இருப்போம்; அவர்களையும் அரவணைத்து இந்தியாவை வளமும், வலுவும் உள்ள நாடாக உருவாக்குவோம் என சபதம் ஏற்போம். இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடனும், மத நல்லிணக்கத்துடனும் இணைந்து நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ

‘குர்பான்’ என்றால் அரபியில் ‘நெருக்கத்தை ஏற்படுத்துதல்’ ஆகும். ‘குர்பானி’ என்ற உருது சொல் ‘தியாகப் பிராணி’ என்று பொருள் தரும். ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக, இறைவனுக்காக தியாகத்தைச் செய்வதன் மூலம் அவனது நெருக்கத்தைப் பெற்றிட முடியும் என்று வலியுறுத்தும் இத்தியாகத் திருநாளில் தியாகத்தால் பிறந்து, தியாகத்தால் வளர்ந்து, தியாகத்தால் இயங்கி வரும் ம.தி.மு.க. சார்பில் எனது நெஞ்சார்ந்த தியாகப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான விழாக்களுள் ஒன்று ‘‘தியாகத்திருநாள்’’ என்று போற்றப்படும் பக்ரீத் பண்டிகையாகும். இந்த இனிய திருநாள் உலகெங்கும் எந்நாளும் சகோதரத்துவம் தழைத்தோங்கும் விதமாகவும், சமத்துவமும் சமாதானமும் நிலைத்திருக்கும் விதமாகவும், அனைத்து இதயங்களிலும் அன்பைப் பரிமாறும் நன்னாளாகப் பரிணமிக்கட்டும்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

இப்ராகிம் நபி இறைவன் ஒருவனே என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு தம்முடைய மார்க்கத்தின் செய்தியாக அளித்தவர். அவரின் இறைபக்தி எல்லையில்லாதது, ஈடில்லாதது. தம்முடைய மகனான இசுமாயிலை அவனுடைய முழு சம்மதத்துடன் இறைவனுக்கு காணிக்கையாக்க முனைந்த தியாக செயலை நினைவு கூறும் தியாகத் திருநாளே யச் பெருநாள் என்னும் பக்ரீத் பெருநாளாகும். இந்தப் புனித திருநாளாம் பக்ரீத் நன்நாளில், நாட்டு மக்கள் அனைவரும் மதவேற்றுமைகளைக் கடந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு நம் நாட்டினை எதிர் நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க சூளுரை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள்.

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திருநாவுக்கரசர், இந்திய சனநாயக கட்சி தலைவர் டாக்டர் பாரிவேந்தர்,

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன்,

எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி,

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.