ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மறுமலர்ச்சி வாகன பிரசாரப் பயணத்தை காஞ்சீபுரம் பெரியார் தூணில் இருந்து தொடங்கினார். இதற்காக காஞ்சீபுரம் வந்த அவர் அண்ணா இல்லத்துக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 27 ஆண்டுகளுக்கு முன்பு இதே அக்டோபர் 3-ந்தேதி என் மீது கொலைப் பழி சுமத்தப்பட்டு தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டேன். அதே போல் தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்று தனிக்கட்சி தொடங்கிய போது அண்ணாவை மறக்காமல் அவரது பெயரை தனது கட்சிக்கு வைத்தார். ஆனால் இன்று தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஊழல் கட்சியாக மாறிவிடடன. இந்த 2 கட்சிகளுக்கும் மாற்றாக மக்கள் நல கூட்டு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த மக்கள் நல இயக்கம் அரசியல் இயக்கமாக மாற்றப்படும். ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை ஆகிய 4 கட்சிகள் இணைந்து புதிய தேர்தல் கூட்டணி அமைக்க உள்ளது. நாளை மறுநாள் (5-ந்தேதி) திருவாரூரில் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும், என்று தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.