Show all

ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்டும் முயற்சிக்கு எதிராக தீர்மானம்! தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று மாலை 4 மணிக்கு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூடியது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கர்நாடகம் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கியதற்கு எதிரான தீர்மானத்தை துணை முதல்வர் முன்மொழிந்தார். அப்போது தீர்மானத்தின் மீது முதல்வர் பேசுகையில் இந்த சட்டமன்றத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரும், நான்கு ஆண்டுகளுக்கு முன்னரும், கர்நாடக அரசு, ஆடுதாண்டும் காவிரியில் புதிய அணை கட்டக் கூடாது என ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கருத்தில் கொள்ளாமலும், 

உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு கீழ் படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்பதையும் மீறி, 

தற்போது கர்நாடக அரசு ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்டுவதற்கான தொடக்கக் கட்டப் பணிகளை தொடங்க உள்ளதற்கும் ஆடுதாண்டும் காவிரியில் புதிதாக அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு நடுவண் நீர் வளக் குழுமம் அனுமதி வழங்கியதற்கும் இம்மாமன்றம் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது. 

நடுவண் நீர் வளக் குழுமம் வழங்கிய அனுமதியை திரும்ப பெற அக்குழுமத்திற்கு நடுவண் நீர் வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில் கர்நாடக அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ கர்நாடகாவில் உள்ள காவேரி படுகையில் ஆடுதாண்டும் காவிரி அல்லது வேறு எந்தவொரு இடத்திலும் தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு நடுவண் அரசு உத்தரவிட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட தீர்மானத்தின் மீது திமுக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்டும் முயற்சிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,993.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.