Show all

சபரிமலையில் இன்னொரு புதிய அதிரடி! மாறுவேடமணிந்து மஞ்சு என்கிற பெண் ஐயப்பனை வணங்கியதாக தகவல்

26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறை முற்றத்தில், மஞ்சு என்ற 35 அகவைப் பெண், அகவை மிகுந்தவர் போல் தோற்றத்தை மாற்றிக்கொண்டு ஐயப்பனை வணங்கியதாக காணொளி வெளியிட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில், இதுவரை பத்துக்கு மேற்பட்ட பெண்கள் ஐயப்பனை வணங்கிய நிலையில், கோவில் ஐதீகம் என்கிற பெயரில் கடைபிடிக்கப் பட்டு வந்த ஆணாதிக்கம் முறியடிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் மகர விளக்குக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் மேலும் ஒரு பெண் ஐயப்பனை வணங்கியதாக காணொளி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கொல்லம் மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த மஞ்சு அகவை 35 என்பவர், சபரிமலை ஐயப்பன் கோவிலில் பதினெட்டாம்படி ஏறி ஐயப்பனை வணங்கியதாக கேரள செய்தி ஒளிபரப்புக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான காணொளியையும் அவர் வெளியிட்டுள்ளார். 

தலைமுடிக்கு வெள்ளை வண்ணம் தீட்டி மாறுவேடமணிந்து அவர் ஐயப்பனை வணங்கியதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் மீண்டும் சபரிமலையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,028.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.