Show all

வீட்டுக்குள் நுழைந்த விபத்து! தூய்மைப்பணியின் போது வாயிலில் கிடந்த செருப்புக்குள் இருந்த பாம்பு கடித்து மரணம்.

சென்னை, இரா.கி.நகரில் சோகம். மழைக்காலம் என்பதால், வாயிலில் கிடந்த செருப்புக்குள் பாம்பு இருந்திருக்கிறது. தூய்மைப்பணியின் போது வாயிலில் கிடந்த அந்த செருப்புக்குள் இருந்த பாம்பு கடித்து பெண் மரணம்.

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னையில் காலணியில் இருந்த பாம்பு கடித்து பெண் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை இரா.கி.நகரை அடுத்த கன்னிகாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி அகவை 38 இவரது மனைவி சுமித்ரா அகவை 35. நேற்று முந்தாநாள் இரவு சுமார் 9 மணி அளவில் வீட்டை தூய்மை செய்த சுமித்ரா, வாசலில் இருந்த காலணிகளை நகர்த்தி வைத்துள்ளார். அப்போது காலணிக்குள் பதுங்கியிருந்த பாம்பு ஒன்று சுமித்ராவின் கையில் கடித்துள்ளது.

உடனே சுமித்ரா வலியால் துடித்து அலறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பழனி சடுதிவண்டி மூலம் சுமித்ராவை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுமித்ரா சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

தற்போது மழைக்காலம் என்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட நச்சுப் பூச்சிகள் அவற்றின் இருப்பிடத்திலிருந்து இடம்பெயர்ந்து வீட்டுக்குள் நுழைய வாய்ப்புள்ளது. அவ்வாறு வரும் நச்சுப் பூச்சிகள் வெளியில் கிடக்கும் துடைப்பம், செருப்புகளில் தங்கிக் கொள்ளும். அதனால் அவற்றை பயன்படுத்தும் போது கவனமாக கையாள வேண்டியது கட்டாயம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,357.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.