Show all

பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு எதிராக அமெரிக்கா செய்யும் மாபெரும் துரோகம். விடுதலைச் சிறுத்த

ராஜபக்சே தலைமையிலான சிங்கள இனவெறிக்கும்பல், அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஈழத்தில் மிகவும் கொடூரமான இனப்படு கொலை குற்றத்தைச் செய்திருந்தாலும், அவர்கள் மீது சர்வதேச அளவில் போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கேனும் பெரும்பாலான சர்வதேச நாடுகளின் ஒப்புதலோடு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நமக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. இத்தீர்மானத்தை அன்று அமெரிக்க வல்லரசே முன்மொழிந்தது. அதனால், அமெரிக்க ஆதரவு நாடுகள் யாவும் அத்தீர்மானத்திற்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்தன. இலங்கையில் தற்போது ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ளது. ராஜபக்சே, அதிபர் மற்றும் பிரதமர் தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்துள்ளார். மைத்ரிபாலா சிறிசேனா அதிபராகவும் ரனில் விக்ரமசிங்கே பிரதமராகவும் வெற்றிப் பெற்றுள்ளனர். இத்தகைய சூழலில், அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ராஜபக்சே கும்பலின் மீதான சர்வதேச புலனாய்வு விசாரணை தேவையில்லை எனவும் உள்ளூர் அளவிலான விசாரணையே போதுமானது எனவும் இது தொடர்பாக ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தில், வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப் போவதாகவும் அண்மையில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றி அறிவித்துள்ளது. அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்காவின் தெற்காசிய வெளியுறவு துணை செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாஸ் இவ்வாறு கூறியிருக்கிறார்.

இலங்கை அதிபராக வெற்றிப் பெற்றதும் சிறிசேனா, சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இராஜபக்சே மீது உள்ளூர் விசாரணையே நடத்துவோமென அறிவித்தார். இவருக்கு ஆதரவாக இன்று அமெரிக்காவும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அமெரிக்க வல்லரசின் ஆதரவாளர்களான ரனிலும் சிறிசேனாவும் இன்று இலங்கையில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் அதே வேளையில், சீனாவின் ஆதரவாளரான ராஜபக்சே படுதோல்வி அடைந்திருப்பதால் அமெரிக்காவின் எண்ணம் ஈடேறிவிட்டதாக அது கருதுகிறது. எனவே, ராஜபக்சே மீதான சர்வதேச விசாரணை தேவையில்லை எனவும் தனது ஆதரவாளரான சிறிசேனாவின் விருப்பத்திற்கு மாறாக செயல்படக்கூடாது எனவும் கருதுகிறது. இது பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு எதிராக அமெரிக்கா செய்யும் மாபெரும் துரோகமாகும்.

ஈழத்தில் தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தொலைநோக்குப் பார்வையோடு மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்படவேண்டுமெனவும் ரனில், சிறிசேனா கும்பலின் சதிவலைக்குள் சிக்கிக்கொள்ளாமல் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு செயல்படவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

அமெரிக்க வல்லரசின் துரோகத்தைக் கண்டிக்கும் வகையிலும் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச புலனாய்வு விசாரணையைக் கைவிடக்கூடாது என வற்புறுத்துகிற வகையிலும் வரும் ஆகஸ்டு 30 சர்வதேச காணாமல் போனவர்களின் தினம் என்பதையொட்டி, ஈழத்தில் காணாமல் போன சுமார் முப்பதாயிரம் தமிழர்கள் தொடர்பாக சர்வதேச புலனாய்வை நடத்திட ஐ.நா. பேரவை முன்வரவேண்டுமென கோருகிற வகையிலும் வரும் செப்டம்பர் 3-ந்தேதி அன்று அமெரிக்கத் தூதரகத்தின் முன்பு விடுதலைச் சிறுத்தைகளின் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.