குருநாதசாமி கோவில் தேர் திருவிழா அந்தியூர் குதிரை சந்தையை கண்டு வியந்த வெளிநாட்டினர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள சிறப்புமிக்க குருநாத சாமி கோவிலில் தேர் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
நேற்று பிற்பகலில் மகமேரு தேர்திருவிழா நடந்தது. குருநாதர், காமாட்சி அம்மன், பெருமாள்சாமி ஆகிய 3 தேர்கள் வனத்துக்கு புறப்பட்டது.
பிறகு வனத்தில் சிறப்பு பூஜை- வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு வனத்தில் இருந்து தேர்கள் நள்ளிரவு 11 மணிக்கு புறப்பட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு புதுப்பாளையம் கோவிலுக்கு வந்தது. அங்கு மண்டபத்தில் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவையொட்டி புகழ்பெற்ற குதிரை- மாட்டுச்சந்தை தொடங்கி நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, பஞ்சாப் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து குதிரைகள் மற்றும் பல்வேறு இன அரிய வகை மாடுகள் சந்தைக்கு வந்தன.
இதில் ஒரு சிலர் தாங்கள் கொண்டு வந்த குதிரைகளுடன் அதில் உட்கார்ந்து அந்தியூர் நகரை மிடுக்குடன் உலா வந்த காட்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா போன்ற வெளிநாட்டினர் தேர் திருவிழாவையொட்டி அந்தியூரில் நடக்கும் குதிரை சந்தையை கேள்விப்பட்டு அந்தியூருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அவர்கள் சந்தைக்கு வந்திருந்த உயர்ரக குதிரைகளையும் அபூர்வ வகை மாடுகளையும் கண்டு பிரமித்தனர்.
பந்தயக்குதிரைகள், ரேக்ளா போட்டியில் பங்கேற்று ஓடும் மாடுகள் என காங்கயம் காளைகள் என ஒட்டுமொத்த வகை- வகையான குதிரை- மாடுகளும் அந்தியூரில் வந்து குவிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குதிரை மற்றும் மாடுகளை வாங்க தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து வியாபாரிகள் அந்தியூர் வந்து உள்ளனர். இவர்கள் ஈரோடு, பவானி, கோபி உள்பட பல்வேறு பகுதிகளில் தங்கி உள்ளனர்.
வரும் சனிக்கிழமை வரை இந்த குதிரை-மாட்டுச்சந்தை நடக்கிறது.:
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.