தயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்டிருந்த முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.பிஎஸ்என்எல் சட்ட விரோத இணைப்பக வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்டிருந்த முன்ஜாமீனை இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் ரத்து செய்து
தீர்ப்பளித்துள்ளார்.
அடுத்த 3 நாட்களுக்குள் மத்திய புலனாய்வுத் துறை முன் சரணடையுமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது.சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம்
வைத்திருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது கூறப்பட்ட புகார் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணை
செய்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தில்லியில் உள்ள தலைமையகத்தில் ஆஜராகுமாறு தயாநிதி மாறனுக்கு மத்திய புலனாய்வுத் துறை அழைப்பாணை அனுப்பியது. இதையடுத்து, தன்னை மத்திய புலனாய்வுத் துறை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி தயாநிதி மாறன் சென்னை
உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, அவரை ஆறு வார காலத்துக்கு கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 30-ஆம் தேதி உத்தரவிட்டது.
அப்போது, விசாரணைக்கு தயாநிதி மாறன் ஒத்துழைக்காவிட்டால் மீண்டும் மத்திய புலனாய்வுத் துறை முறையிடலாம் எனவும் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து, தயாநிதி மாறனிடம் கடந்த ஜூலை
1, 2, 3 ஆகிய தேதிகளில் மத்திய புலனாய்வுத் துறை தலைமையகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று மத்திய புலனாய்வுத் துறையால்
கூறப்படுகிறது.
இதையடுத்து தயாநிதி மாறனைக் கைது செய்து காவலில் வைத்து விசாரிக்கும் வாய்ப்பை மத்திய புலனாய்வுத் துறை பரிசீலித்து வருகிறது. அதற்கு ஏதுவாக,
தயாநிதி மாறனுக்கு உயர் நீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமினை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.