Show all

கருணாநிதி உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி

தேமுதிக போராட்டத்தில் பங்கேற்றோர் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:அகிம்சை வழியில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி தர மறுத்த முதல்வர் ஜெயலலிதாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 தேமுதிக தொண்டர்கள் மீது காட்டு மிராண்டித்தனமாக காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதன் விளைவாக, சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமைந்தகரை அண்ணாநகர் வளைவு பகுதியில் தேமுதிகவினரைக் காவல்துறை கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்ற போது, அதிமுகவினர் கும்பலாகச் சேர்ந்து கொண்டு பேருந்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.

 அதில் பேருந்தின் கண்ணாடி நொறுங்கியுள்ளது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் யாரெனத் தெரிந்தும் காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேமுதிகவின் அறவழி போராட்டத்தை ஆதரித்து, அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த கருணாநிதி, பொன்.ராதாகிருஷ்ணன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன்,  ஜி.கே.வாசன், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு தேமுதிக சார்பில் எனது மனமார்ந்த நன்றி.

தேமுதிகவின் இதுபோன்ற அறப்போராட்டங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.