Show all

ஊரே கொண்டாட்டத்தில்- பேரப்பிள்ளைகள் முத்தமழை! ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற பட்டுக்கோட்டை மூதாட்டி

மலேசியாவில் நடைபெற்ற மூத்தோர்களுக்கான ஆசிய தடகளப் போட்டியில், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 72 அகவை ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்.

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மலேசியாவில் நடைபெற்ற மூத்தோர்களுக்கான ஆசிய தடகளப் போட்டியில், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 72 அகவை ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்.

பட்டுக்கோட்டையில் வசிப்பவர் திலகவதி. உடற்கல்வி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு அகவை 72. கணவர் செல்வராஜ் சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு சுஜாதா, அஜிதா என இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

சிறு அகவையிலிருந்தே விளையாட்டின் மீதும் ஆர்வம் கொண்ட இவர் தடை தாண்டும் தடகளப் போட்டி உட்பட தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், சாதனைகள் செய்வதற்கு அகவை ஒரு தடையில்லை என நிரூபித்து வருகிறார்.

இந்தநிலையில் மலேசியா நாட்டில் குச்சிங்க் என்ற இடத்தில் கடந்த கிழமை, மூத்தோர்களுக்கான 21-வது ஆசிய தடகளப்போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திலகவதி 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும் 80 மற்றும் 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியிருக்கிறார். பதக்கங்களுடன் ஊர் திரும்பிய அவரின் வெற்றியைக் கொணடாட ஊரே திரண்டிருந்தது.

மூத்தோர்களுக்கான போட்டி எங்க நடந்தாலும் நான் தவறாமல் கலந்து கொள்வேன். தற்போது, மலேசியாவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் இந்தியாவிலிருந்து 200 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதுடன் பல பிரிவுகளில் நடந்த பல போட்டிகளில் விளையாடினோம். இதில், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கமும் 80 மற்றும் 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றேன். இதற்காக என்னைப் பலரும் பாராட்டி வாழ்த்தியது மகிழ்ச்சியாக இருந்தது. ஊருக்கு வந்ததும் என் பேரப் புள்ளைங்க என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது எனக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது என்கிறார் திலகவதி. நாமும் வாழ்த்திக் கொண்டாடுவோம்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,362.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.