Show all

500-ஆவது கோலை அடித்தார் ரொனால்டோ

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின்போது ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 500-ஆவது கோலை அடித்தார்.

ஐரோப்பிய (யுஇஎஃப்ஏ) சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் ஸ்வீடனில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் மால்மோ எஃப்எஃப் - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.

இந்தப் போட்டியின் 29-ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்தார். அவரது கோல் எண்ணிக்கையில் இது 500-ஆவது மைல்கல் ஆகும். இந்த சிறப்பை ரொனால்டோ தனது 753-ஆவது போட்டியில் பெற்றுள்ளார்.

இதன் பின்னர் 90-ஆவது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒரு கோலை அடித்தார். இந்த முறை, ரியல் மாட்ரிட் அணிக்காக அதிக கோல் அடித்த ரால் கன்ஜாலெஸ் (323 கோல்) சாதனையை ரொனால்டோ சமன் செய்தார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மால்மோ அணியால் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க இயலவில்லை. முடிவில், 2-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது.

போட்டிக்குப் பின்னர் ரொனால்டோ கூறுகையில், "நான் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளேன். முதலில் அணியின் வெற்றியே முக்கியம். ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ரால் கன்ஜாலெஸ் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்' என்றார். தனது சாதனையை சமன் செய்த ரொனால்டோவுக்கு கன்ஜாலெஸ் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.