Show all

கேல் ரத்னா விருது வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் அர்ஜூனா மற்றும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இதில் கேல் ரத்னா, விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு, இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து சானியா மிர்சாவுக்கு கேல் ரத்னா விருது வழங்குவதற்கான முறையான அறிவிப்பை அண்மையில் மத்திய அரசு வெளியிட்டது. இந்த விருதை வரும் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினத்தன்று ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாராலிம்பிக் விளையாட்டு வீரர் எச்.என்.கிரீஷா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,2011-14க்கு இடைப்பட்ட காலத்தில், சானியா எந்த ஒரு மெடலும் வெல்லவில்லை. விருது குழுவின் வழிமுறைப்படி பார்த்தால் தனக்கு 90 மதிப்பெண்கள் கிடைத்திருக்க வேண்டும். விருதும் தனக்குதான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சானியாவை ஏன் விருதுக்கு தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கான வெளிப்படைத்தன்மை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை இன்று விசாரணைக்கு ஏற்ற கர்நாடக உயர் நீதிமன்றம், சானியா மிர்சாவுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்க இடைக்கால தடை விதித்தது. மேலும், மத்திய அரசு மற்றும் சானியா மிர்சா ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் இந்த மதிப்புமிக்க விருதுக்கு லியாண்டர் பயஸுக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாதான் என்பது கவனிக்கத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.