Show all

பாராளுமன்ற தேர்தல்! தமிழகத்தின் தற்போதைய களநிலவரம்: 4 முனை போட்டியா

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 4 முனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க தயாராகி வருகின்றன.

ஆளும் பாஜகாவை மிகச் சிறிய கட்சிகள் உட்பட எந்தக் கட்சியும் (பாமக விதிவிலக்கு) கூட்டணியில் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. 

அதிமுகவை உடைத்து, எடப்பாடி-பன்னீரை இணைத்து, சசிகலாவை சிறையில் தள்ளி, மாற்று அணிக்கு, அதாவது தினகரனுக்கு குற்றப்பின்னணி சாயம் பூசி, எடப்பாடி-பன்னீருக்கு ஆட்சியைக் கொடுத்திருப்பது பாஜகவின் ஆட்சிஅதிகார பலத்தால்தான். அதே ஆட்சி அதிகார பலத்தில் அதிமுகவை தன்னோடு கூட்டணிக்கு நிர்பந்திக்கிறது பாஜக. எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு, பலகட்சிகள் வலைவிரித்தாலும், ராகுல்தான் தலைமைஅமைச்சர் என்ற நப்பாசையை யூட்டி, காங்கிரசைக் கக்கத்தில் பிணைத்துக் கொண்டுள்ளது. 

காங்கிரஸ் விழிபிதுங்க தினகரனையும், கமலையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. தினகரன் அணிதான் உண்மையான அதிமுக என்று தமிழக மக்கள் இராகிநகரில் தீர்ப்பளித்ததை ஒப்பிட்டு பார்க்கிறது.

ஆளும் அதிமுக யாரோடு சேர்ந்தாலும் தாங்கள் தோற்கப் போவது உறுதி என்கிற அச்சம் அவர்களுக்கே இருக்கிறது. ஸ்டொர்லைட்டுக்கு ஆதரவாக 13 மனித உயிர்களைப் பலியிட்டதை தமிழ்மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்ற அச்சம் தொற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் பாஜகவிடம், தங்கள் குடும்பநலன் சார்ந்த ஆட்சிக்காக, தமிழகத்தின் அனைத்து நலன்களையும் விட்டுக் கொடுத்து விட்டு, அடிப்படையான வரி வாங்கும் உரிமையையும் இழந்து, தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகன் மீதும் ஐம்பதாயிரம் கடனுக்கு வரவு-செலவு திட்டம் வடித்து விட்டு, நீலிக்கண்ணீர் வடிப்பதை எந்தத் தமிழனும் மன்னிக்க மாட்டார்கள். இதனால் தோற்றாலும் சரி வென்றாலும் சரி, சுருட்டியது மிச்சம். மோடி பெரியண்ணன் காட்டிய வழியே நம் வழி என்று இருக்கின்றனர்.

ஆகவே, அதிமுக கூட்டணியில் பா.ஜனதா இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகும் நிலையில் உள்ளது. தே.மு.தி.க, பா.ம.க, ஆகிய கட்சிகளையும் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

இதுதவிர தங்கள் நிறுவன நலன்களுக்காக எப்போதும் நடுவண் அரசோடு ஒட்டிக்கொண்டு அதற்கேற்ற நியாயங்களை உருவாக்கி நடித்துக் கொண்டிருக்கும், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, பாரிவேந்தரின் ஐ.ஜே.கே. கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் இந்த கூட்டணியில் இடம் பெறுகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் அதுதான் அண்மையில் சென்னையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தலைமைஅமைச்சர் வேட்பாளர் ராகுல்காந்தி என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தாரே.

இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளை இணைக்க முடிவாகி உள்ளது. அதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க இருக்கிறது. பா.ம.க. இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது என்று திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். எனவே தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர வாய்ப்பு இல்லை.

இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், அ.தி.மு.க, பா.ஜனதா ஆகிய 2 கட்சிகளை நேரடியாக விமர்சித்து வந்தார். இதனால் அவர் தி.மு.க. பக்கம் சாய்வார் என்று கருதப்பட்டது. ஆனால் அவர் காங்கிரசுடன் சேர்ந்து தி.மு.க. அல்லாத கூட்டணியை உருவாக்கும் ரகசிய முயற்சியில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தியுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவரது யோசனை ஏற்கப்படாததால் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று கமல்ஹாசன் திடீர் என்று அறிவித்தார்.

மேலும் அ.தி.முக.வைப் போல் தி.மு.க.வும் அழுக்கு மூட்டை என்று கமல்ஹாசன் விமர்சித்தார். இது தி.மு.க.வுக்கு கடும்கோபத்தை ஏற்படுத்தியது. கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க.வும் நடிகர் சந்திரசேகர் மூலம் கடுமையாக தாக்கி அறிக்கை வெளியிட்டது. இதனால் கமல்ஹாசன் தனியாக ஒரு அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு ஆம்ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அண்மைகாலமாக சுயேச்சையாக அரசியலை விமர்சித்துவரும் நடிகர் பிரகாஷ்ராஜும் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தி.மு.க.வுடன் சேரும் முடிவில் இருப்பதால் கமல்ஹாசன் தனித்தே 3வது அணியாக களம் இறங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அமமுக என்ற தலைப்பில் இருந்து கொண்டு, எப்படியும் அதிமுகவை சில தேர்தல்கள் முடிந்த பிறகு, எடப்பாடி-பன்னீர் அணி முகவரியைத் தொலைத்த பிறகு அதிமுக தமது கைக்கு வாங்கி கொடுத்து விடுவார்கள் அதிமுக உண்மைத் தொண்டர்கள் அதற்கு தமிழக மக்கள் துணையிருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறார். 

இராகிநகரில் பணபலத்தால் அவர் வெற்றிபெற்றதாக கமல்ஹாசன் விமர்சித்தார். இதனால் கமல்ஹாசனும், தினகரனும் சேரும் வாய்ப்பு இல்லை. தினகரன் தற்போது தமிழ் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

தினகரனுக்கு தி.மு.க., அ.தி.மு.க. போல் கூட்டம் அதிகம் வருவதால், யாரைப் பற்றியும், எந்தக் கூட்டணி பற்றியும் கவலையில்லாமல் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். தினகரனின் இலக்கு தமிழக ஆட்சியல்ல் அதிமுகவை மீட்பது ஒன்றே அவர் இலக்கு. அதற்குத் தோதான நகர்வுகளும், வெற்றிகளும் அவருக்குப் போதுமானது.

தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 4 முனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் நாள் இன்னும் அறிவிக்கப்பட வில்லை. கூட்டணி பேச்சு வார்த்தைகள் தொடக்க கட்ட நிலையில் தான் தீவிரமாக இருக்கிறது.

எனவே அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கமல்ஹாசனுக்கும் தி.மு.க.வுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் அவருக்கு காங்கிரஸ் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. கமல்ஹாசனுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே சமரச முயற்சியாகவே காங்கிரசின் அழைப்பை எடுத்துக் கொள்ளலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,060.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.