திருக்குறள் இலக்கியப் படைப்பாகக் கருதப்படுவதால், நடுவண் அரசு
கடைப்பிடிக்கும் கொள்கையின்படி அதை தேசிய நூலாக கலாசாரத் துறை அறிவிப்பதற்கான வாய்ப்பு
இல்லை என்று நடுவண் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் கடந்த 2014-இல் திமுக உறுப்பினர்
திருச்சி சிவா விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த நடுவண் அரசு, அதன் நிலைப்பாட்டை தற்போது
தெளிவுபடுத்தியுள்ளது. இதை விளக்கி திருச்சி சிவாவுக்கு நடுவண் சுற்றுலா, கலாசாரத்
துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா அண்மையில் கடிதம் அனுப்பியுள்ளார். உலகிலேயே அதிக மொழிகளில்
மொழிபெயர்க்கப் பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தை திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இந்திய மொழிகளில்- குசராத்தி, இந்தி, வங்காளம், கன்னடம், கொங்கணி, மலையாளம், மராத்தி,
ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமற்கிருதம், சௌராட்டிரம், தெலுங்கு போன்ற 13மொழிகளிலும் ஆசிய மொழிகளில்- அரபி, பருமியம், சீனம், பிஜியன், இந்தோனேசியம், யப்பானியம்,
கெரியா, மலாய், சிங்களம், உருது போன்ற 10மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளில்- செக், டச்சு, ஆங்கிலம், பின்னியம், பிரஞ்சு, செருமன், அங்கேரி,
இத்தாலி, இலத்தின், நார்வே, போலியம், உருசியம், எசுப்பானியம், சுவிடியம் ஆகிய 14மொழிகளிலும்
மொழி பெயர்க்கப் பட்டுள்ள பெருமைக்குரியது திருக்குறள் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய நூலாக திருக்குறள்
அறிவிக்கப் படும் போது பெருமை படவிருப்பது இந்தியாவேயன்றி திருக்குறள் புதியதாக பெறப்
போவது பெரிதாக ஒன்றுமில்லை. உலகத்திற்கே பொதுவான
நீதி சொல்லும், உலகமே பாராட்டி ஏற்றிருக்கும் திருக்குறளை- திருக்குறளின் உள்ளீட்டை புரிந்து கொள்ள முயலாத நடுவண் ஆட்சியாளர்களின்,
பொது சீரியல் சட்டத்தை
நடைமுறை படுத்தும் ஆர்வம்- இந்திய மக்களிடம் நடைமுறையில் இருக்கும் பண்பாடுகள் கலாச்சார
அடிப்படையில் அமையாமல் மதவாத அடிப்படையில் அமைந்து, பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன கதையாகப் போகிறது
என்று பேசிக் கொள்கிறார்கள் தமிழ் முதுச்சான்றோர் பெருமக்கள். அதற்கேற்றார் போல், ‘பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது
தேசிய பணி’ என்று
சிவசேனா தெரிவித்துள்ளது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள்
குறித்து விரிவாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட கமிஷனுக்கு நடுவண் சட்ட
அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், நேற்று பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின்
தலையங்கத்தில் கூறி இருப்பதாவது: இந்தியா அனைத்து
கலாசாரங்களையும் உள்ளடக்கிய நாடாக இருக்கலாம். ஆனால், ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையை வைத்து கடந்த
60 ஆண்டுகளாக அரசியல்வாதிகள் நாட்டை அழித்துவிட்டனர். நாட்டில், இந்துக்களுக்கும்,
முஸ்லிம்களுக்கும் வெவ்வேறு சட்டம் இருக்கிறது. உண்மை என்னவென்றால், முஸ்லிம்களுக்குத்
தனிச்சட்டம் இருந்தால், மற்றொரு பாகிஸ்தானை நாமே ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். பொது சிவில் சட்டத்தை நீங்கள் (பா.ஜனதா) நடைமுறைப்படுத்துவீர்கள்
என்றும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவீர்கள் என்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பதில்
என்ன தவறு இருக்கிறது? காரணம், நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, இதனை நடைமுறைப்படுத்த
வேண்டும் என்று தீவிரமாக இருந்தீர்கள். பொது சிவில் சட்டத்தை நடுவண் அரசு முன்எடுத்து செல்ல வேண்டும்.
இதனை நடைமுறைப்படுத்துவது தேசிய பணி. மோடி அரசுக்கு தனிப்பெரும்பான்மை இருக்கிறது.
இதனை அவர்களே மதிக்க வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.