Show all

வரவிருக்கும் தேர்தலுக்கு மீண்டும் அதே வாக்குறுதி! விரைவில் உங்கள் கணக்கில் ரூ.15 லட்சம் விழும்: நடுவண் அமைச்சர் ராமதாஸ் அத்வாலே

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் வைப்பு செய்வேன் என்று தலைமை அமைச்சர் ஆவதற்காக மோடி வாக்குறுதி அளித்தார். 

ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், பெண்களின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கிற கறுப்பு பணத்தை மீட்பதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

ஆனால் இதுவரையில் வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் வைப்பு என்பது தொடர்பாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலும் மீண்டும் வரவிருக்கிறது.

இந்நிலையில் நடுவண் அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பேசுகையில், அனைவரது வங்கி கணக்கிலும்  ரூ.15 லட்சம் விழும்  என நம்பிக்கையை தெரிவித்துள்ளார். மராட்டியத்தில்  இந்தியக் குடியரசு கட்சியின் மாநில செயலாளரின் உறவினர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதற்காக ராமதாஸ் அத்வாலே சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், 5 மாநில தேர்தல்களில் பாஜகவிற்கு ஏற்பட்ட செல்வாக்கு சரிவு தொடர்பாக கூட்டணி கட்சிகள் கவலை கொண்டுள்ளன.  வரும் தேர்தலிலும் மோடியை முன்வைத்து பாஜக கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும். மராட்டியத்தில் பாஜகவுடன் சிவசேனா மீண்டும் கைகோர்க்க வேண்டும் என்றார். 

அனைவரின் வங்கி கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய் வைப்பு தொடர்பாக பேசுகையில், ரிசர்வ் வங்கியில் அவ்வளவு தொகை இல்லாததால்தான் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வெகு விரைவாக குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அச்சாரமாக ஒரு இலட்சம் மட்டும் வங்கிக் கணக்கில் போடுங்கள்; ரிசர்வ் வங்கியில் பணம் சேர்ந்ததும் மீதியைக் கொடுங்கள் என்கிறார்கள் மக்கள். 

காகம் நரியிடம் வடை ஏமாந்ததாக கதை சொல்லுவது பழைய காலம். தற்போது குழந்தைகளுக்கு: நரியின் புகழ்ச்சியின் காரணத்தை காகம் புரிந்து கொண்டதால், காகம் வடையை காலில் வைத்து கொண்டு அப்புறம் காகா காகா என்று பாடிதாகக் கற்பிக்கப் படுகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,005.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.