Show all

மிகச் சரியான முடிவு! ஒரு பண்பாடு கெட்ட, தனியார் பள்ளியின் அங்கீகாரம் இரத்து

13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திராவில் வீட்டுப்பாடம் எழுதாத 5-ம் வகுப்பு மாணவர்கள் 6 பேரை 1 மணி நேரம் ஆடையின்றி நிற்க வைத்த தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் சைதன்ய பாரதி என்ற தனியார் பள்ளி உள்ளது. ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கும் இந்தப் பள்ளியில் சுமார் 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 5-ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர், வகுப்புக்கு வெளியே வெயிலில் ஆடையின்றி சுமார் 1 மணி நேரம் நிற்க வைக்கப்பட்டனர்.

வீட்டுப் பாடம் எழுதாததாலும் பள்ளிக்கு தாமதமாக வந்ததாலும் மாணவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

சக மாணவர்களின் கேலிக்கு ஆளானதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். பிறகு புங்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இப்புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர், பள்ளி நிர்வாகி நாகராஜு நாயுடுவை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்தப் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரி நேற்று அறிவித்தார்.

அறிவை பயிற்றுவிக்கிறோம் என்ற பேரில் புற்றீசலாய் முளைக்கும், பண்பாடு இல்லாத பள்ளிகள் நாட்டுக்குக் கேடு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,014.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.