Show all

ஜெயலலிதா சார்பில் இரண்டு குற்றவியல் அவதூறு வழக்குகள் தாக்கல்

சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில், முதல்அமைச்சர் ஜெயலலிதா சார்பில் அரசு வழக்கறிஞர் இரண்டு குற்றவியல் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்தார்.

அதில் ஒரு வழக்கில்,

ஆனந்தவிகடன் வார இதழில் நவம்பர் மாதம் வெளியீட்டில், ஆட்சி அதிகாரம் செல்வாக்கு பணபலம் என்ன செய்தார் ஜெயலலிதா? என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதில். ஜெயலலிதாவைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக உள்நோக்கத்துடன் அவதூறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே, இந்த வார இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் கண்ணன், பதிப்பாளர் மாதவன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

அதேபோல மற்றொரு வழக்கு முரசொலி பத்திரிகையில் வெளியான கருணாநிதியின் கேள்வி-பதில் அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கில், முரசொலி இதழில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி கேள்வி-பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 4 ஆண்டு ஆட்சியில் சாதித்தது என்ன?  என்ற தலைப்பில் ஜெயலலிதாவைப் பற்றி உள்நோக்குத்துடன், உண்மைக்கு புறம்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

எனவே, முரசொலி இதழின் ஆசிரியர் முரசொலி செல்வம், கட்டுரை எழுதிய கருணாநிதி ஆகியோர் மீது குற்றவியல் அவதூறு சட்ட வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த 2 வழக்குகளும் மாவட்ட முதன்மை நீதிபதி ஆதிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது, ‘ஆனந்த விகடன் மீதான அவதூறு வழக்கிற்கு அந்த இதழின் ஆசிரியர் கண்ணன், பதிப்பாளர் மாதவன் ஆகியோர் வருகிற பிப்ரவரி 1-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் முரசொலி இதழின் மீதான அவதூறு வழக்கிற்கு அந்த இதழின் ஆசிரியர் முரசொலி செல்வம், கட்டுரையாளர் மு.கருணாநிதி ஆகியோர் ஜனவரி 18-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.