Show all

சபரிமலையில் ஐயப்பனை வணங்கிய பெண்கள் எண்ணிக்கை படிப்படியாக கூடுகிறது! இதுவரை 10 பெண்கள் ஐயப்பனை வணங்கியுள்ளனர்

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து அகவை பெண்களும் சென்று வணங்கலாம்; என்று உச்சஅறங்கூற்றுமன்றம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு (பெண்ணடிமைத்தன மனப்பான்மை சார்ந்த) கோவில், பழமைவாதத்திற்கு எதிரானது என்று கூறி பாஜக சார்பு ஹிந்துத்துவாவாதிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நியாயமற்ற போராட்டத்தை பொருட்படுத்தாமல், இளம்பெண்கள் பலரும் அணி, அணியாய் சபரிமலைக்கு சென்றனர்.

இதனால் சபரிமலையில் பதட்டமான நிலை உருவானது. கோயில் கருவறை முற்றம் வரை சென்ற பெண்கள் 18-ம்படி ஏறாமல் திரும்பும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கேரள காவல்துறையினர் சபரிமலை செல்ல விரும்பிய பெண்களை கமுக்கமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். அதன்படி, கடந்த புதன் கிழமை பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்கள் சபரிமலை சென்று 18-ம்படி ஏறாமல் பின்பக்க வழியாக சென்று, ஐயப்பனை வணங்கி திரும்பினர்.

பிந்து, கனகதுர்கா இருவரும் கோயில் கருவறை முற்றம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. முதன்முதலாக இளம்பெண்கள் ஐயப்பனை வணங்கியதாகவும் கூறப்பட்டது.

பிந்து, கனகதுர்காவை தொடர்ந்து நேற்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் சசிகலா என்பவரும் ஐயப்பனை வணங்கியதாகத் தகவல் வெளியானது. இவர், 18-ம் படி ஏறி சென்றதாகவும் கூறப்பட்டது. இது உண்மைதான் என்று காவல்துறையினர் கூறினர். 

கோயில் கருவறை முற்றத்தில் இருந்த கண்காணிப்பு படக்கருவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், பெண் ஒருவர் இருமுடி கட்டுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. 

இதற்கிடையே இலங்கை பெண் சபரிமலையில் ஐயப்பனை வணங்கிய தகவலை முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் உறுதி செய்தது. இந்த தகவல் வெளியானதும் காவல்துறையினர் இன்னொரு தகவலை வெளியிட்டனர்.

சசிகலா, ஐயப்பனை வணங்கியதை உடனடியாக தெரிவித்தால் அவரது பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்படும் என்பதாலேயே அவரை பத்திரமாக விமான நிலையத்தில் இறக்கிவிட்ட பின்பு இந்தத் தகவலை வெளியிட்டதாக தெரிவித்தனர்.

கேரள காவல்துறையினர் மேலும் இதுபற்றி கூறும்போது, சபரிமலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலேசியாவைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினர் சபரிமலை வந்ததாகவும், அதிலும் 3 இளம்பெண்கள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த இளம்பெண்களும் சபரிமலை ஐயப்பனை வணங்கியதாகக் கூறினர். இவர்களையும் சேர்த்து இதுவரை 10 இளம்பெண்கள் ஐயப்பனை வணங்கியுள்ளதாகக் கூறினர்.

இளம்பெண்கள் பலரும் அடுத்தடுத்து ஐயப்பனை வணங்கி வரும் நிலையில் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஐயப்பனை வணங்க ஆர்வமாக இருக்கும் தகவலையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கு இந்த மாத இறுதியில் விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது உச்ச அறங்கூற்ற மன்ற உத்தரவுப்படி சபரிமலையில் ஐயப்பனை வணங்கிய இளம்பெண்கள் குறித்த விவரங்களை காவல்துறையினர் அறிக்கையாக பதிகை செய்வார்கள் என தெரிகிறது.

அந்த அறிக்கையில் எத்தனை இளம்பெண்கள் இதுவரை ஐயப்பனை வணங்கிச் சென்றுள்ளனர், மற்றும் அவர்கள் யார்? யார்? என்ற விவரமும் வெளியாகலாம் என்று தெரிகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,023.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.