Show all

தாம்பரம் பேருந்து நிலையத்தில் நடந்த கொடூரம்! பேருந்துக்குள்ளேயே அம்மாவை கொன்ற மகனின் காட்டுமிராண்டித்தனம்

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் மாலை நேரத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

சென்னை தாம்பரத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை ஐயப்பன்தாங்கல் அருகே வசித்து வருபவர் முத்தம்மாள். நேற்று இவர் தனது மகள் விஜயலட்சுமியுடன் தாம்பரம் சென்றுவிட்டு, மீண்டும் ஐயப்பன்தாங்கல் செல்வதற்காக தாம்பரம் பேருந்து நிலையத்தில் நின்று இருக்கிறார். மாலை 5.30 மணி அளவில் தாம்பரம் செல்லும் 166ம் எண் பேருந்து அங்கு வந்துள்ளது. இருவரும் அந்த பேருந்தில் ஏறி, அமர்ந்து இருக்கிறார்கள். மாலை நேரம் என்பதால் அந்த பேருந்து கூட்டமாக இருந்துள்ளது.

இந்த நிலையில் அந்த பேருந்து புறப்பட போகும் நேரத்தில், அதில் ஏறிய முத்தம்மாளின் மகன் தேவராஜ், அங்கிருந்த கூட்டத்தை விலக்கிவிட்டு முத்தம்மாள் மற்றும் விஜயலட்சுமியை மிக மோசமாக தாக்கினார். அதே இடத்தில் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து வெளியே குதித்து ஓடினார்.

பேருந்தில் இருந்த மக்கள் எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு வேகமாக வெளியே ஓடினார்கள். அரிவாள் காயத்தால் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்து முத்தம்மாள் மற்றும் விஜயலட்சுமி இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்த முத்தம்மாள் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பலியானார். விஜயலட்சுமி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். கொலையை செய்த தேவராஜ் நேரடியாக சென்று தாம்பரம் காவல்நிலையத்தில் சரணடைந்துவிட்டார். இந்த கொலை தொடர்பான பதற வைக்கும் காணொளிக் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அதிர வைக்கிறது.

சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். கொலை செய்த தேவராஜ் அளித்த வாக்குமூலத்தின்படி, சொத்து பிரித்து கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொலை நடந்ததாக தெரிய வந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,006.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.