உத்தரபிரதேச மாநிலம், தாத்ரி பகுதியில் பிசோதா என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள ஒரு குடும்பத்தினர், பசுவை அடித்துக்கொன்று சமைத்து சாப்பிட்டதாக கோவிலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இக்லாக் (வயது 50) என்பவரது வீட்டுக்குள் கடந்த 28-ந் தேதி புகுந்த ஒரு கும்பல், அவரை அடித்துக்கொன்று விட்டது. அவரது 22 வயது மகன் டேனிசும் தாக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பசுவின் இறைச்சி சாப்பிட்டதாக இக்லாக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தாத்ரி சம்பவம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகிஉள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், தாத்ரி போன்ற சம்பவங்கள் இந்தியாவின் புகழுக்கு நல்லது கிடையாது என்று கூறிஉள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நாட்டின் நிலையை காயப்படுத்திவிட்டது. “இந்தியா பக்குவப்பட்ட சமுதாயத்தை கொண்டது. நாட்டை பொறுத்தவரையில், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பு நாட்டிற்கு நல்ல பெயரை கொடுக்காது,” என்று அருண் ஜெட்லி கூறிஉள்ளார். தாத்ரி சம்பவம் துரதிஷ்டவசமானது என்று கூறிஉள்ள அருண் ஜெட்லி கண்டனத்தையும் பதிவுசெய்து உள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.