Show all

தமிழக வீரர் சுப்பிரமணியனும் ஒருவர்! ஜெய்சு இ முகம்மது தீவிரவாதிகள் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில், 40 வீரர்கள் பலி

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 300 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை சொகுசுந்தில் ஏற்றி வந்த ஜெய்சு இ முகம்மது தீவிரவாதி நடுவண் ஆயுதப்படை காவலர் வாகனத்தின் மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் பலியாயினர். புல்வாமா-ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்த இந்த தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த தாக்குதலில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேவுள்ள சிவலப்பேரியை சேர்ந்த நடுவண் ஆயுத காவல்படை வீரர் சுப்பிரமணியனும் உயிரிழந்து விட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த செய்தியால் அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும், சிவலப்பேரி மக்களுக்கும் கவலையில் மூழ்கியுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய வீரர் சுப்பிரமணியன் தந்தை கணபதி மற்றும் ஊர் மக்களும், நடுவண் ஆயுத காவல்படை வீரர்கள் மீது தாக்குதல் தொடுத்த தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வெண்டும், தீவிரவாதிகளின் சதியை முறியடிக்க வேண்டும் என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

முன்னதாக பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, உயிரிழந்த வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தார் மற்றும் ஊர் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருவதாகவும், அவரது நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

உயிரிழந்த பாதுகாப்பு படை வீரரான சுப்பிரமணியன், தொழிற்கல்வி பயின்றவர். இந்திய ராணுவத்தில் சேர அதிகம் ஆர்வம் காட்டிய அவருக்கு நடுவண் ஆயுத காவல்படை பிரிவில் பணி கிடைத்தது. சென்னை, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வந்துள்ளார். 

கடந்த ஆண்டுதான் சுப்பிரமணியன், கிருஷ்ணவேனி என்பவரை கரம் பிடித்தார். இந்த இணையருக்கு குழந்தைகள் இல்லை. பொங்கலை முன்னிட்டு, ஊருக்கு வந்த சுப்பிரமணியன், கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் நடுவண் ஆயுத காவல்படை பிரிவில் மீண்டும் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் அவர் காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்த செய்தி குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. குறிப்பாக அவரது தந்தை கணபதி மகன் இறந்துவிட்டதை ஏற்க மனமில்லாமால், மகன் காயப்பட்டுவிட்டரா? இல்லை இறந்துவிட்டரா என்று பார்ப்பவர்களிடம் கேட்டு வருவது, காண்போரின் நெஞ்சை உறையச் செய்கிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,064.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.