Show all

தொடரும் பாலியல் வன்முறை சோகங்கள்

மேட்டூர் அருகே 7 அகவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள். அவளது உடலை அண்டாவுக்குள் மறைத்து வைத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள தெலுங்கனூர் பகுதியை சேர்ந்தவள் 7 அகவை சிறுமி. அங்குள்ள ஒரு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் மாலை மிட்டாய் வேண்டும் என்று தனது தந்தையிடம் சிறுமி கேட்டாள்.

உடனே, கடைக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு அவளது தந்தை மிட்டாய் வாங்கி கொடுத்து வீட்டுக்கு போகுமாறு கூறினார். ஆனால் சிறுமி இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் அவளை அக்கம்பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும் தேடினர். ஆனாலும் அவள் கிடைக்கவில்லை.

இதனால் சிறுமியின் பெற்றோர் நேற்று காலை கொளத்தூர் காவல் நிலையம் சென்று தங்களது மகளை காணவில்லை என்றும், அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரின் 17 அகவை பேரன் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, கொளத்தூர் காவல்துறையினர் அந்த முதியவரின் வீட்டுக்கு சென்றனர். காவல்துறையினரைப் பார்த்ததும் முதியவரின் பேரன் வீட்டின் சுற்றுச் சுவரை தாண்டிக் குதித்து ஓட்டம் பிடித்தார். காவல்துறையினர் அவரை விரட்டிப்பிடித்து விசாரித்தனர். அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு உடலை பிளேடால் அறுத்து வீட்டின் பூசை அறையில் உள்ள அண்டாவுக்குள் மறைத்து வைத்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து காவல்துறையினர் அவருடன் முதியவரின் வீட்டுக்குள் சென்றனர். அங்கு சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடல் சுருட்டி அண்டாவுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. சிறுமியின் கழுத்தில் இருந்து அடி வயிறு வரை பிளேடால் அறுக்கப்பட்டு இருந்தது. அந்த பிளேடு சிறுமியின் உடை மேல் கிடந்தது. மேலும், பூசை அறையில் ஆங்காங்கே மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு குங்குமமும் சிதறிக்கிடந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மேட்டூர் துணை காவல் கண்காணிப்பாளர் நடராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். சேலம் தடயவியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதியவரின் பேரனை கைது செய்தனர். இந்தக் கொலை குறித்து முதியவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியை முதியவரின் பேரன், பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு அதை திசை திருப்புவதற்காக நரபலி கொடுத்தது போல குங்குமத்தை சிதறவிட்டு இருக்கலாம் என காவல்துறையினர்  சந்தேகிக்கின்றனர்.

 

இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அந்த வீட்டின் முன்பு கூடினர். சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

சிறுமியை கொலை செய்தவரின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஆகும். இவர் கொளத்தூர் அருகே தெலுங்கனூரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி மேட்டுப்பனையூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார். அப்போது இவர் சக மாணவரின் வாயில் துணியை திணித்து அவரது மர்ம உறுப்பை கடித்து உள்ளார். அதையொட்டி கிராமமக்கள் அவரது தாத்தாவிடம் இனி உனது பேரன் தெலுங்கனூர் கிராமத்துக்குள் வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

இதனால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ராயக்கோட்டை சென்ற அவர் நேற்று முன்தினம்தான் மீண்டும் தெலுங்கனூருக்கு வந்து இருக்கிறார். அன்றே அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.