Show all

ஆட்டத்தைத் தொடங்கி விட்டது கருநாடகம், அரசியலில் இறங்கிவிட்டது பாஜக! ஆடுதாண்டும் காவிரியில் அணையாம்; அனுமதியாம்

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி தோன்றும் இடத்தில் இருந்து முடியும் வரை, தமிழகப் பகுதிகளாகப் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்தன. கரைபுரண்டு ஓடிவரும் காவிரியை வேளாண்மைக்கு பகிர்ந்தளிக்க திருச்சியிலே கல்லணையைக் கட்டினார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் மன்னன் கரிகாலன்.

இந்திய விடுதலைக்குப் பிறகு காவிரி தோன்றுமிடத்தில் அமைந்த கருநாடக அரசு, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமலே, மேலும் மேலும் அணைகளைக் கட்டி தமிழகத்திற்கான தண்ணீரைக் குறைத்துக் கொண்டே வந்தது.  காவிரிநீருக்காக  தமிழகம் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. காவிரி பிரச்சனையை தீர்க்க மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் நீண்டகாலமாக மேற்கொண்ட சட்டப்போராட்டம் காரணமாக வெற்றி கிடைத்தது. காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் 'காவிரி மேலாண்மை ஆணையம்'அமைக்கப்பட்டடது. இப்பிரச்சனை முடிந்த நிலையில் மற்றொரு பிரச்சனை தலையெடுத்துள்ளது. அதாவது ஆடுதாண்டும் (மேகேதாட்டு) காவிரியின் குறுக்கே அணையை கட்டுவோம் என்று கர்நாடகா மீண்டும் அறிவித்துள்ளது. 

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகப்புரா பகுதியில் ஆடுதாண்டும் காவிரி அமைந்துள்ளது. இங்கு பெரும் பாறைகளுக்கு நடுவே அருவிகளாக, காவிரி மிக மிக ஆழமாக ஒடுங்கி பாய்கிறது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் அமைந்திருக்கும் ஆடுதாண்டும் காவிரியில்தான் அர்காவதி ஆறும், சில துணை ஆறுகளும் காவிரி ஆற்றுடன் கலக்கின்றன. இங்கு மிகவும் குறுகலான இடம்வழியாகத்தான் ஆழமாக, ஆடு தாண்டும் நிலையில் காவிரி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆடுதாண்டும் காவிரி என்பதைத்தான்  மேகதாது என்று கன்னட மொழியில், மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

இங்கு ரூ.5912 கோடி செலவில் புதிய அணையைக் கட்ட கர்நாடகா முடிவு செய்துள்ளது. இந்த அணையின் மூலம் 66 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து, 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் புனல் மின்சார நிலையம் தொடங்க கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. அணை தொடர்பான திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயசந்திரா வெளியிட்டார். இதனை தொடர்ந்து தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது. 

ஆடுதாண்டும் காவிரியில் புதிய அணை என்றதும் அப்போதைய முதல்-அமைச்சர் செயலலிதா எதிர்ப்பு தெரிவித்து தலைமைஅமைச்சருக்க கடிதம் எழுதினார்.

சட்டமன்றத்தில் பேசுகையில் 'காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மீறும் வகையிலும், தமிழ்நாடு அரசின் இசைவு பெறாமலும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த உத்தேசிக்குமானால், தமிழ் நாட்டின் உரிமையை நிலைநாட்ட, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு மேற்கொள்ளும்' என்றார். 

கடந்த ஆண்டு சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை இத்திட்டத்திற்கு கொள்கை ரீதியிலான அனுமதியை வழங்கியது. கடந்த ஆண்டு கர்நாடக அரசு திட்டத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியகூறுகள் பற்றி அறிக்கையை நடுவண் நீர் ஆணையத்திடம் வழங்கியது. கர்நாடக தேர்தல் முடிந்து நீண்ட இழுபறிக்குப் பிறகு முதலமைச்சரான குமாரசாமி இந்த அணை நிச்சயம் கட்டப்படும் என்றார். திங்களன்று மோடியைச் சந்தித்து பேசிய குமாரசாமி, திட்டத்தை முன்னெடுக்க உதவுமாறு கோரிக்கையை விடுத்தார்.

மீண்டும் இந்த அணை கட்டுவது தொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கையை நடுவண் நீர்வள ஆணையத்துக்கு கர்நாடக அரசு அனுப்பிவிட்டது. அப்போதும் தமிழகம் எதிர்ப்பை பதிவு செய்தது.

நடுவண் நீர்வள ஆணையம் இந்த அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு அனுமதியை அளித்துள்ளது. தமிழகம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறங்கூற்றுமன்றத்தை நாடவும் தமிழகம் முடிவு செய்துள்ளது. இந்த அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை நடுவண் அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். 

தமிழகம் எதிர்ப்பு தெரிவித்ததும், இந்த அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இந்த அணையின் தேவையை தமிழக அரசுக்கு எடுத்துரைப்பேன் என்றார் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார். 

காவிரியில் இனி எந்த ஒரு திட்டத்தையும் முன்னெடுத்தால் காவிரி மேலாண்மை வாரியத்தின் இசைவு மிகவும் முதன்மையானதாகும். இந்நிலையில் காவிரி ஆணையத் தலைவர்  மசூத் {ஹசைன் விளக்கம் அளிக்கையில்,  தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்த அணை கட்ட கர்நாடகத்துக்கு ஒப்புதல் தரமாட்டோம். காவிரி ஆற்றின் படுகை பகுதிக்குள் இந்த அணை வருவதால் ஆணையத்தின் தலையீடு நிச்சயம் இருக்கும் என்று கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,984.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.