Show all

கடைகள், திரையரங்குகள் 24மணி நேரமும் செயல்பட நடுவண் அமைச்சரவை ஒப்புதல்

கடைகள், திரையரங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம்: நடுவண் அமைச்சரவை ஒப்புதல்

கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கும் மாதிரி சட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை தனது ஒப்புதலை புதன்கிழமை அளித்துள்ளது.

 

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற நடுவண் அமைச்சரவைக் கூட்டத்தில், 2016-ஆம் ஆண்டு கடைகள், நிறுவனங்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணியிடச் சூழலை முறைப்படுத்துதல்) மாதிரி சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

 

கூட்டத்துக்கு பிறகு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வேலைவாய்ப்பை அதிகரிப்பதே இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும. 10 அல்லது அதற்கு அதிகமான தொழிலாளர்களுடன் செயல்படும் வணிக வளாகங்கள் போன்றவை வாரத்துக்கு 7 நாள்களும் செயல்படலாம். அவற்றுக்கு என குறிப்பிட்ட எந்த வேலை நேரமும் நிர்ணயிக்கப்படவில்லை. மாதிரி சட்டம், மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், இது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

இந்த மாதிரி சட்டத்துக்கு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலை நடுவண் அரசு பெற வேண்டியதில்லை. இந்த சட்டத்தில் தங்களது தேவைகளுக்கு ஏற்ப மாநில அரசுகள் மாற்றங்களைச் செய்து அமல்படுத்திக் கொள்ளலாம்.

 

இந்த சட்டத்தின்கீழ் 10 அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் ஊழியர்களுடன் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள் அல்லாத கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவைகளுக்கு ஆண்டு முழுவதும் 365 நாள்களும் விருப்பம் போல 24 மணி நேரமும் செயல்படுவதற்கு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி), உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணிபுரியும் உயர் திறன் கொண்ட தொழிலாளர்கள், நாளொன்றுக்கு 9 மணி நேரமும், வாரத்துக்கு 48 மணி நேரமும் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்பதிலிருந்து சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்புடன் பெண்களை இரவு நேர பணியில் அமர்த்தவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணிபுரியும் ஊழியர்களுக்கு குடிநீர் வசதி, உணவு விடுதி, முதலுதவி வசதி, சிறுநீர் கழிப்பதற்கான இடவசதி, தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கான இடவசதி போன்றவற்றை உரிமையாளர்கள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.